கடையநல்லூர்-உதவித் தொகை வழங்காத அரசு பள்ளி முற்றுகை
கடையநல்லூர்: கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக பீடி தொழிலாளர்களின் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படாததை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,300 மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கும், பீடித் தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த மாணவிகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை என்று புகார் இருந்து வந்தது.
அத்துடன் ஆங்கிலம் வழி கல்வி பயிலும் மாணவிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும், பள்ளியில் நோட்புக், ஒர்க் புக் உட்பட புத்தகங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
மாணவிகளிடம் வசூல் செய்யப்படும் பணத்திற்கு முறையான ரசீது வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் நேற்று காலை மேலக்கடையநல்லூர், கிருஷ்ணபுரம் பகுதிகளில் இருந்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர் சுமார் 30 பேர் பள்ளியை முற்றுகையிட்டு கல்வி உதவித் தொகையை உடனே வழங்க வேண்டுமென கோஷம் எழுப்பினர்.
அப்போது தலைமை ஆசிரியை பிரேமாவதி பள்ளியில் இல்லை. அரசு ஒதுக்கிய கல்வி உதவி நிதியை மாணவிகளுக்கு வினியோகம் செய்வதில் முறைகேடு நடப்பதாக பெற்றோர்களிடையே புகார் எழுந்துள்ள நிலையில் இது குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெற்றோர்களின் இந்த திடீர் முற்றுகை போராட்டத்தால் கடையநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.