பொடா நீதிமன்றத்தில் வைகோ-பாஸ்போர்ட்டை திரும்ப பெற்றார்
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று பொடா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தனது பாஸ்போர்ட்டை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக வைகோ, கணேசமூர்த்தி, புலவர். செவந்தியப்பன், பூமிநாதன், வீரஇளவரசன், அழகுசுந்தரம், நாகராஜன், கணேசன், மணியம் ஆகிய 9 பேர் 2002ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 2004ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி மக்களவைத் தேர்தலையொட்டி வைகோ ஜாமீனில் வெளியே வந்தார்.
அப்போது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபத்தனை விதிக்கப்பட்டது. இதையடுத்து பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
இதற்கிடையே பொடா மறு ஆய்வுக் குழு வைகோ மீது வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை என்றும், வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு 2004ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி உத்தரவிட்டது.
முதலில் இந்த உத்தரவை மதிக்க மறுத்தது ஜெயலலிதா அரசு. பின்னர் ஒரு வழியாக வைகோ மீதான வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரி பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை வாபஸ் பெற அனுமதி மறுத்தார்.
இதையடுத்து வைகோ உள்ளிட்ட 9 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் பொடா நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்தது.
இந் நிலையில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. வந்தவுடன் பொடா சட்டத்தையே ரத்து செய்தது. ஆனாலும் இச் சட்டதின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் 18ம் தேதி பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நவம்பர் 7ம் தேதிக்குள் வைகோ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பாஸ்போர்ட்டை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டார்.
இதை த்தொடர்ந்து வைகோ இன்று காலை பொடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆவடி தியாகராஜன்மூர்த்தி முன் ஆஜராகி பாஸ்போர்ட்டை பெற்றுக் கொண்டார்.
வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் பேசுகையில், வெளிநாடு செல்ல இருப்பதால் பாஸ்போர்ட்டை பெற நீதிமன்றத்தில் ஆஜரானேன். வழக்கு நிலுவையில் தான் உள்ளது என்றார்.