For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீட்டுக் காவலிலிருந்து பெனாசிர் பூட்டோ விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

Benazir Bhuttoஇஸ்லாமாபாத்: வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நேற்று நள்ளிரவில் விடுவிக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் நெருக்குதலைத் தொடர்ந்தே பெனாசிரை விடுவிக்க முஷாரப் உத்தரவிட்டதாக தெரிகிறது.

பாகிஸ்தானில் அவசர நிலை அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கு நிலைமை படு மோசமாகி வருகிறது. எதிர்க்கட்சியினர் ஒடுக்கப்படுகின்றனர், கூட்டம் கூட்டமாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். வக்கீல்கள், நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என யாரையும் காவல்துறையினர் விட்டு வைக்கவில்லை.

இந்த நிலையில் ராவல்பிண்டி நகரில் பெனாசிர் கட்சி சார்பில் முஷாரப்புக்கு எதிராக பேரணி நடத்த நேற்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு காவல்துறை தடை விதித்தது. இருப்பினும் தடையை மீறி பேரணிக்குச் செல்லப் போவதாக பெனாசிர் அறிவித்தார்.

இதையடுத்து நேற்று திடீரென பெனாசிர் வீட்டு முன்பு போலீஸார் குவிக்கப்பட்டனர். பெனாசிர் பூட்டோ கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் பெனாசிரின் வீட்டுக் காவல் விலக்கிக் கொள்ளப்பட்டது. அவர் விடுதலை செய்யப்பட்டதாக காவல்துறை துணை ஆணையர் ஆமிர் அலி அகமது தெரிவித்தார்.

மேலும் பெனாசிர் வீட்டின் முன்பு குவிக்கப்பட்ட போலீஸாரும் விலக்கிக் கொள்ளப்பட்டனர். முள்வேலிகள் உள்ளிட்ட தடுப்பு அரண்களும் அகற்றப்பட்டன.

பெனாசிர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதால் அமெரிக்கா பெரும் அதிர்ச்சி அடைந்தது. முஷாரப் எல்லை மீறிப் போவதாக உணர்ந்த அதிபர் புஷ், முஷாரப்பைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உடனடியாக பெனாசிரை விடுதலை செய்ய வேண்டும் என அவர் முஷாரப்பை கண்டிப்புடன் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்தே பெனாசிர் விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

முஷாரப்பை நம்பாதீர்கள் - பெனாசிர்:

முன்னதாக போலீஸார் வீட்டைச் சுற்றி குவிக்கப்பட்டு, முள்வேலிகள் போடப்பட்டு வீட்டுக் காவலில் முடக்கப்பட்டிருந்த நிலையில் பெனாசிர் ஒலிபெருக்கி மூலம் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது, அரசு நிர்வாகம் முற்றிலும் செயலிழந்து விட்டது. முஷாரப்பின் பேச்சை நம்ப முடியாது, நம்பும்படியாக அவரது செய்கைககள் இல்லை. அரசியல் சாசனச் சட்டத்தை மீண்டும் கொண்டு வந்து, ராணுவத் தலைமைத் தளபதி பதவியிலிருந்து விலகிய பின்னர் தேர்தல் நடத்தப்படும் என முஷாரப் கூறினால் மட்டுமே அதை நம்ப முடியும்.

முஷாரப் பேசுவதை உலக நாடுகள் நம்பக் கூடாது. அவர் பாகிஸ்தான் மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார். இன்னொரு ஈராக் ஆக பாகிஸ்தான் மாறி வருகிறது. அதை அனுமதிக்க மாட்டோம் என்றார்.

இந்த நிலையில் பெனாசிர் பூட்டோ பல்வேறு நாடுகளின் தூதர்களை இன்று சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். மேலும் நவம்பர் 13ம் தேதி, ஜனநாயகத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, லாகூரிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு வாகன ஊர்வலம் நடத்தி பிரசாரம் மேற்கொள்ளவும் பெனாசிர் திட்டமிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X