சிறப்புப் பொருளாதார மண்டலம்: விளைநிலங்களை கையகப்படுத்த உச்சநீதிமன்றம் தடை
டெல்லி: சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக மாநில அரசு நிலங்களைக் கையகப்படுத்தும்போது, விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, தரிசு நிலங்களை மட்டுமே கையகப்படுத்த வேண்டும் என்று முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசும், மாநில அரசுகளும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளன. இதற்கு விவசாயிகள் மத்தியிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் மத்தியிலும் எதிர்ப்புகள் நிலவுகின்றன.
இடது சாரிக் கட்சிகள், பாமக உள்ளிட்ட பல முக்கியக் கட்சிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக அரசுகளே நிலங்களை, குறிப்பாக விளைநிலங்களை கையகப்படுத்தவே கூடாது என்று கோரி வருகின்றன.
இந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை பிறப்பித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேவேந்தர் சிங் மற்றும் சிலர் தங்களது விளை நிலங்களை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து பஞ்சாப் - ஹரியாணா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் அவர்களுக்கு பாதகமான தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர்கள் அப்பீல் செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா, ஹர்ஜீத் சிங் பேடி ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. வழக்கை விசரித்த நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் கீழ், ஒரு நிறுவனத்திற்காக, அரசே நிலத்தை கையகப்படுத்தும்போது, அந்த நிலம் விளைநிலமா என்பதைப் பார்க்க வேண்டும்.
நல்ல விளைச்சல் உள்ள நிலங்களை அரசு கையகப்படுத்தக் கூடாது. தரிசு நிலத்தை மட்டுமே கையகப்படுத்த முயற்சிக்க வேண்டும். இதில் மாநில அரசு எந்தவிதத்திலும் தவறக் கூடாது.
இந்த வழக்கு தொடர்பாக பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்றம் மனுதாரருக்கு எதிராக பிறப்பித்துள்ள தீர்ப்பு தவறானது. அரசு ஒரு விதிமுறையை வகுத்தால், அதை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் பஞ்சாப் மாநில அரசு வகுத்த விதியை அதுவே கடைப்பிடிக்காமல் மீறியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
ஆனால் இதைக் கவனிக்காமல் பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு தவறானது. எனவே அதை தள்ளுபடி செய்கிறோம் என்று தீர்ப்பில் தெரிவித்தனர்.
மேலும் மாநில அரசுக்கு ரூ. 25,000 அபராதமும் விதித்தனர்.