கனவில் வந்த காந்திஜி - தலாய் லாமா
டெல்லி: என்னுடைய வாழ்நாளில் நான் காந்தியை சந்தித்தது கிடையாது. ஆனால் அவரை நான் கனவில் சந்தித்தேன் என்று புத்தமதத் தலைவரான் தலாய் லாமா கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச சத்தியாகிரக நூற்றாண்டு மாநாட்டில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது,
புத்தமதத்தில் நாமெல்லாம் மீண்டும் பிறப்போம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி என்னுடைய வாழ்நாளில் நான் பலமுறை காந்திஜியுடன் தொடர்பு கொண்டுள்ளேன்.
நான் காந்தியை நேரில் சந்தித்ததில்லை. ஆனால், திபேத்தில் ஒரு குளிர்கால இரவில் என் கனவில் காந்தியை சந்தித்தேன்.
அமெரிக்க நாட்டின் சட்ட உரிமை தலைவர் மார்டின் லூதர் கிங்கின் மனைவி சமீபத்தில் என்னிடம் கூறும்போது, என்னுடைய கணவர் காந்திஜியின் தத்துவங்களால் கவரப்பட்டவர். அதிலும் காந்திஜியைப் போல எளிய உடை அணிய விரும்பினார் என்றார்.
ஒரு அமெரிக்கர் அவ்வளவு எளிதாக இருக்க விரும்புவாரா என்று அப்போது என்னால் கொஞ்சம் கூட நினைத்து பார்க்க முடியவில்லை.
எந்தவொரு ஆயுதமின்றி, வன்முறையை கையாளாமல் தன்னுடைய போராட்டத்தை கையாண்டவர் காந்திஜி.
இளம் இந்திய நண்பர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், நீங்கள் அனைவரும் கண்டிப்பாக காந்தியின் கொள்கைகளை கடைபிடித்து, காப்பாற்ற வேண்டும் என்றார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் உலகம் முழுவதும் இருந்து 17 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.