வங்கிக் கடன்: புகார் தர மாணவர்களுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை
கோயம்புத்தூர்: கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள் குறித்த விவரத்தை மாணவர்கள் தனக்கு விரிவான புகாராக அனுப்பினால், சம்பந்தப்பட்ட வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
நேற்று கோவை வந்த ப.சிதம்பரத்திடம், கல்விக் கடன் வழங்க பல வங்கிகள் மறுப்பதாகவும், இதுதொடர்பாக நிதியமைச்சகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த ப.சிதம்பரம், கல்விக் கடன் வழங்க மறுத்த, மறுக்கும் வங்கிகள் குறித்த அனைத்து விவரத்தையும் மாணவ, மாணவியர் எனக்கு அனுப்பலாம். அப்படி அனுப்பப்படும் புகார்கள் குறித்து விசாரித்து, தவறு செய்த வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நான் உறுதி அளிக்கிறேன்.
இதுதொடர்பாக ஒவ்வொரு மாணவ, மாணவியரும் எனக்கு தனித் தனியாகவே புகார்களை அனுப்பலாம். இதன் மூலம் நடவடிக்கை எடுக்க எளிதாக இருக்கும் என்றார் அவர்.
இந்த சமயத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மாணவ, மாணவியர் சிலருடன் அமைச்சரை அணுகினார். அவரிடம், இந்த மாணவ, மாணவியருக்கு வங்கிகள் படிப்புக் கடன் வழங்க மறுத்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த மாணவ, மாணவியரிடம் இதுதொடர்பாக தனக்கு விரிவான தகவல்களைத் தருமாறு ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.