மதச்சார்பற்ற ஜனதாதள அமைச்சர்கள் 21ம் தேதி பதவியேற்பு
பெங்களூர்: கர்நாடக பாஜக அமைச்சரவையில் இடம் பெற மதச்சார்பற்ற ஜனதாதளம் தீர்மானித்து விட்டது. வருகிற 21ம் தேதி இக்கட்சியைச் சேர்ந்த 18 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளதாக குமாரசாமி கூறியுள்ளார்.
துணை முதல்வர் பதவிக்கு குமாரசாமியைப் போடுவதா அல்லது அவரது அண்ணன் ரேவண்ணாவைப் போடுவதா என்ற குழப்பத்தில் தேவெ கெளடா இருந்து வருகிறார். இதன் காரணமாக அமைச்சரவையில் சேராமல் வெளியிலிருந்து ஆதரவு தரலாம் என்ற முடிவுக்கும் அவர் வந்தார்.
இதனால் பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியும், அதிருப்தியும் ஏற்பட்டது. இந்த நிலையில் பாஜக அமைச்சரவையில் இடம் பெற மதச்சார்பற்ற ஜனதாதளம் தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் குமாரசாமி பேசுகையில், மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்கள் வருகிற 21ம் தேதி அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொள்வார்கள். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
துணை முதல்வர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கட்சித் தலைவர் தேவெ கெளடாவிடம் கொடுத்து விட்டோம்.
பாஜக ஆட்சியில் அமர்ந்ததும், எங்களுடன் கலந்து ஆலோசிக்காமல், அதிகாரிகள் மாற்றம் உள்ளிட்ட சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை என்றார் குமாரசாமி.












Click it and Unblock the Notifications