நந்திகிராம் பிரச்சினை: நாடாளுமன்றத்தில் பாஜக,இடதுசாரிகள் மோதல்- அவைகள் ஒத்திவைப்பு
டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் 3 நாள் இடைவெளிக்குப் பின் இன்று தொடங்கியது.
மக்களவை தொடங்கியதும் பாஜக எம்பிக்கள் எழுந்து மேற்கு வங்கத்தின் நந்திகிராம் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்றனர். இதற்கு கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட விவகாரம், இதனால் அதை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டியதில்லை என்றனர்.
ஆனால் முன்பு குஜராத்தில் நடந்த மதக் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் பிரச்சனை எழுப்பியதை சுட்டிக் காட்டிய பாஜக எம்பிக்கள் நந்திகிராம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றனர்.
அப்போது பேசிய சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, முதலில் கேள்வி நேரம் முடியட்டும். பிறகு அது குறித்து பரிசிலிக்கலாம் என்றார்.
ஆனால், அதை பாஜக எம்.பிக்கள் ஏற்கவில்லை. இப்போதே விவாதிக்க வேண்டும் என கூச்சலிட்டனர்.
பதிலுக்கு இடதுசாரிகளும் குரல் தரவே அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. பல முறை கேட்டுக் கொண்டு அமளி அடங்காததால் அவையை சபாநாயகர் பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார்.
அதே போல மாநிலங்களவையிலும் நந்திகிராம் பிரச்சினை தொடர்பாக பாஜக- இடதுசாரிகள் இடையே மோதல் மூண்டது. அங்கு பேசிய பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி, மேற்கு வங்காளத்தில் இடதுசாரி அரசை காங்கிரஸ் கண்டிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
இதையடுத்து பாஜக மற்றும் காங்கிரஸ்-இடதுசாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாநிலங்களவையும் பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பிற்பகலில் ஒத்தி வைக்கப்பட்ட அவைகள் மீண்டும் கூடியபோதும் இதே பிரச்சனை வெடித்தது. இதையடுத்து இரு அவைகளும் இன்று முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டன.












Click it and Unblock the Notifications