ராஜினாமா செய்தார் எதியூரப்பா-பாஜக ஆட்சி கவிந்தது
பெங்களூர்: கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எதியூரப்பா ராஜினாமா செய்தார். இதையடுத்து கர்நாடகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிட்டது.
இன்று கர்நாடக சட்டசபையில் முதல்வர் எதியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க இருந்த நிலையில் அவருக்கு எதிராக வாக்களிக்குமாறு மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களுக்கு அக் கட்சியின் தலைவர் தேவெ கெளடா உத்தரவிட்டார்.
இதையடுத்து எதியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு பாஜக மேலிடம் அறிவுறுத்தியது. ஆனால், எதியூரப்பா தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று காலை சட்டமன்றத்தில் தீர்மானத்தை முன் மொழிந்தார்.
ஆனால், மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் அவைக்கே வரவில்லை. இருப்பினும் நம்பிக்கை தீர்மானம் வெல்லும் என பிற்பகல் வரை எதியூரப்பா கூறிக் கொண்டிருந்தார். ஆட்சியைக் காக்க கெளடா தரப்பிடம் கடைசி நிமிடம் வரை பேச்சு நடத்தினார்.
ஆனால், கெளடா தனது நிலையில் பிடிவாதமாக இருந்தார். இந் நிலையில் நம்பிக்கை தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது.
விவாதம் நடந்து கொண்டிருந்தபோதே இடையில் எழுந்த முதல்வர் எதியூரப்பா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தவிட்டு வெளியேறினார்.
பின்னர் கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்கக் கிளம்பினார்.
குமாரசாமியின் முதல்வர் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சியை தொடர்வதற்கு சிக்கலை உருவாக்கினார் கெளடா. தனது மகனே ஆட்சியில் தொடரும் வகையில் காங்கிரசுடன் கைகோர்க்க முயன்றார். ஆனால், கெளடா-குமாரசாமியை ஒதுக்கிவிட்டு ஜனதா தளத்தின் பிற தலைவர்களுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர காங்கிரஸ் முயன்றது.
இதையடுத்து மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்தார். பாஜகவின் எதியூரப்பா முதல்வரானார்.
ஆனால், இந்தக் கூட்டணி ஆட்சியை நடத்துவதற்கு 12 விதிமுறைகளை வகுத்த கெளடா அது தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தையும் உருவாக்கி அதில் பாஜக கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் பெங்களூர் நகர மேம்பாட்டுத்துறையையும் கனிம வளத்துறையையும் தனது கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார்.
ஆனால், கெளடாவின் நிபந்தனைகளை ஏற்கவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் பாஜக மறுத்தது.
இதையடுத்து நேற்று வரை (ஞாயிற்றுக்கிழமை) பாஜகவுக்கு கெடு விதித்தார் கெளடா. ஆனால், அதையும் பாஜக கண்டுகொள்ளவில்லை. ஒப்பந்தத்தில் கையெழுத்தெல்லாம் போட முடியாது என எதியூரப்பா கூறினார். அப்படியென்றால் ஆதரவு வாபஸ் என கெளடா அறிவித்தார்.
இதையடுத்து சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக எதியூரப்பா கூறி வந்தார். ஆனால், இதை ஏற்க கெளடா ஏற்கவில்லை.
இந் நிலையில் தனது கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கெளடா நேற்று அவசரமாகக் கூட்டினார். இதையடுத்து கெளடாவை ஒதுக்கிவிட்டு அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியை சந்தித்துப் பேசினார் எதியூரப்பா. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் தோல்வியே ஏற்பட்டது.
இந் நிலையில் கவர்னர் ராமேஸ்வர் தாக்கூரின் உத்தரவுப்படி இன்று (19ம் தேதி) சட்டமன்றத்தில் எதியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
ஆனால், இன்று காலை கெளடா தலைமையில் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுக்கும் எதியூரப்பா அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு தனது எம்எல்ஏக்களுக்கு கெளடா உத்தரவிட்டார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கெளடாவை சமாதானப்படுத்தும் கடைசி கட்ட முயற்சிகளில் பாஜக ஈடுபட்டது. ஆனால் அந்த முயற்சிகள் வெல்லவில்லை.
இந் நிலையில் சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் ஆஜராகிவிட்ட நிலையில் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் வெகு நேரம் வரை வரவில்லை.
நீண்ட நேரத்துக்குப் பின் அவர்கள் அவைக்கு வந்ததையடுத்து நம்பிக்கை தீர்மானத்தை எதியூரப்பா முன் மொழிந்தார். இதன் மீது விவாதம் தொடங்கியது. ஆனால், தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடப்பதற்கு முன்பே தனது பதவியை ராஜினாமா செய்வதாக எதியூரப்பா அறிவித்தார்.
இதையடுத்து கவர்னர் ராமேஸ்வர் தாக்கூரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கக் கிளம்பினார்.
இதைத் தொடர்ந்து அரசை கலைத்துவிட்டு மீண்டும் ஜனாதிபதி ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரை செய்வார்.