என் மீது ஜாதி முத்திரை குத்தாதீர்கள்-சரத்குமார்
மதுரை: என் மீது ஜாதி முத்திரை குத்தாதீர்கள் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற அகில இந்திய லயன்ஸ் சங்க மண்டல மாநாட்டில் அவர் பேசுகையில்,
எதிர்காலம் எப்படி இருக்கும், என்ன நடக்கும் என தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து செயல்பட்டால்தான் எதையும் சாதிக்க முடியும். பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள்.
இந்த நிலை நீடிக்கக்கூடாது. கிராமப் பகுதி மக்கள் நகரங்களை நோக்கி வந்து கொண்டேயிருக்கின்றனர். விளைநிலங்கள் அழிக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் வேலை தேடிக் கொள்ளலாம் என்பது மாயத் தோற்றம்.
எனவே, கிராமப் பகுதி முன்னேற்றத்துக்கு கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும். நகரங்களை போன்று கிராமங்களிலும் தரமான கல்வி அளித்து, வேளாண்மையில் புரட்சி ஏற்படுத்த வேண்டும்.
ஆங்காங்கே தினமும் கொலை, கொள்ளை, வன்முறை நடக்கிறது. இதனை தடுக்க காவல்துறையில் அரசியல் குறுக்கீடுகள் இருக்கக்கூடாது.
நான் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் கருத்துகளை கேட்டு, அவர்களின் தேவை என்ன என்பதை அறிந்துதான் புதிய கட்சி துவக்கியுள்ளேன். அரசியலில் மட்டுமே என்ன ஜாதி என்று பார்க்கின்றனர்.
காமராஜர் தேசிய தலைவர். அவர் மீது ஜாதி முத்திரை குத்த முடியாது. என்னை பொறுத்தவரை மக்கள் கருத்தை அறிந்து கட்சி துவங்கியுள்ளேன்.
என் மீது ஜாதி முத்திரை குத்தாதீர்கள். நான் திட்டமிட்டு கட்சி கொள்கை திட்டங்களை வகுத்துள்ளேன் என்றார் சரத்குமார்.