தலை தீபாவளிக்கு வந்த புதுப் பெண் காதலனுடன் ஓட்டம்!
திருவள்ளூர்: தலை தீபாவளிக்கு தாய் வீட்டிற்கு வந்த புதுப் பெண், அங்கு தனது கணவருக்கு டேக்கா கொடுத்து விட்டு காதலனுடன் வீட்டை விட்டு ஓடினார். ஆனால் போலீஸார் துரிதமாக செயல்பட்டு அந்தப் பெண்ணை மீட்டனர்.
திருவள்ளூர், மேல்விளாகமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் சரளாவுக்கும், தாம்பரத்தை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
தலை தீபாவளிக்காக தனது தாய் வீட்டிற்கு சரளா கணவருடன் வந்திருந்தார். மனைவியுடன் சேர்ந்து சந்தோஷமாக தலை தீபாவளியை கொண்டாடிய சங்கரிடம், சரளா தாய் வீட்டில் சில தினங்கள் இருந்துவிட்டு வருவதாக கூறியுள்ளார். அதனால் மனைவியை தாய் வீட்டில் விட்டு விட்டு சங்கர் தாம்பரத்திற்கு போய் விட்டார்.
இந்த நிலையில், கடந்த 15ம் தேதியன்று சரளா தனது தாயாருடன் தனது கணவர் வீட்டிற்கு செல்வதற்காக திருவள்ளூர் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அங்கு கழிவறைக்கு செல்வதாக சொல்லி விட்டு சென்ற சரளா வெகு நேரமாகியும் வரவில்லை.
இதனால் பயந்து போன சரளாவின் தாய் அவரை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால், மகள் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் செய்தார். சங்கருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சரளா, சீனிவாசன் என்பவருடன் திருப்பூரில் இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று இருவரையும் மீட்டு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சரளா திருமணத்திற்கு முன்னர் 3 வருடங்களாக சீனிவாசனைக் காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு சரளாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும். அவசரம் அவசரமாக சரளாவை சங்கருக்குக் கட்டி வைத்து விட்டனர்.
கல்யாணம் ஆன பிறகும் கூட காதலனை மறக்க முடியாமல் இருந்த சரளா, தலை தீபாவளிக்கு வந்தபோது அதை பயன்படுத்தி காதலருடன் தப்பி விட்டார்.
போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications