'திருமணம்' நடத்தி மருத்துவ மாணவர்கள் நூதனப் போராட்டம்!

எம்.பி.பி.எஸ். படிப்பை ஆறரை ஆண்டுகளாக உயர்த்தியும், கிராமப்புறங்களில் ஒரு வருடம் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை புதிய முடிவை எடுத்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
முதல்வர் கருணாநிதி இதில் தலையிட்டு மத்திய அரசுடன் பேசி தீர்வு காண முயற்சிக்கிறேன் என்று உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து சென்னையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு விட்டது. இருப்பினும் தமிழகத்தின் மற்ற இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் மவுன விரதம், மனிதச்சங்கிலி, உண்ணாவிரம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் இரண்டு மாணவர்கள் வயதானவர்கள் போல் வேடம் போட்டுக் கொண்டு கல்லூரி வளாகத்திற்குள் மற்ற மாணவர்கள் கெட்டிமேளம் முழங்க 'திருமணம்' செய்து கொண்டனர்.
இந்த திருமணப் போராட்டத்தின் மூலம், அரசின் உத்தரவால் நாங்கள் இப்போதைக்கு பணியை தொடங்கி திருமணம் செய்யப் போவதில்லை. வயது முதிர்ந்த பிறகுதான் திருமணம் என்பதை அரசுக்கு விளக்கவே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்கள் செய்த இந்த நூதன திருமணப் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications