அப்ரூவர் ரவி சுப்ரமணியத்தை விடுவிக்கக் கோரி தம்பி வழக்கு
சென்னை: சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவரான ரவி சுப்ரமணியத்தை விடுதலை செய்யக் கோரி அவரது சகோதரர் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார் ரவி சுப்ரமணியம். அதன் பின்னர் அவர் அப்ரூவர் ஆனார். தொடர்ந்து சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார் ரவி சுப்ரமணியம்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெரும்பாலானவர்கள் ஜாமீனில் விடுதலையாகி வெளியே உள்ளனர். இந்த நிலையில் ரவிசுப்ரமணியத்தின் சகோதரர் முரளி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், சங்கரராமன் கொலை வழக்கில் எனது சகோதரர் ரவி சுப்ரமணியம் அப்ரூவர் ஆகியுள்ளார். கிரிமினல் சட்டப்படி அப்ரூவரால் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வர முடியாது.
இந்த வழக்கில் கிட்டத்தட்ட அனைத்துக் குற்றவாளிகளுமே ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். முக்கியக் குற்றவாளிகளான ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோரும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். ஆனால் எனது சகோதரர் மட்டும் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக சிறையில் அடைபட்டுள்ளார்.
எனது சகோதரருக்கு கொலையில் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. இந்தக் கொலைச் சதித் திட்டம் தொடர்பாக மட்டுமே அவருக்கு தெரியும்.
அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும். அப்படி விடுவிக்கப்பட்டால் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தை அவர் மாற்றிக் கூற மாட்டார் என உறுதியளிக்கிறேன் என்று கூறியுள்ளார் முரளி.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் பி.டி. தினகரன், ரகுபதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications