குஜராத் தேர்தல்-திமுக ஸ்டைலில் காங்
அகமதாபாத்: திமுக ஸ்டைலில் இலவச கலர் டிவி, இலவச கோதுமை, அரிசி ஆகிய வாக்குறுதிகளை குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்து கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தது, திமுகவின் தேர்தல் அறிக்கைதான். திமுக அறிவித்த இலவச கலர் டிவி, 2 ரூபாய்க்கு கிலோ அரிசி, இலவச நிலம் உள்ளிட்ட அறிவிப்புகள் வாக்காளர்களைக் வெகுவாக கவர்ந்தன. இதன் காரணமாக திமுக கூட்டணிக்கு வெற்றி கிடைத்து ஆட்சியைப் பிடித்தது.
இப்போது இதே பாணியை குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் கடைப்பிடித்துள்ளது. 20 கிலோ கோதுமை, 10 கிலோ அரிசி, இலவச கலர் டிவி ஆகிய கவர்ச்சிகரமான அறிவிப்புகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
குஜராத்தில் வருகிற 11 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மோடி தலைமையில் பாஜகவினர் படு மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மோடிக்கு முட்டுக் கொடுத்து காங்கிரஸ் கூட்டணியும் படு தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
மோடிக்கு சாதகமாக நிலவும் ஆதரவு அலையை முறியடிக்கும் வகையில் தற்போது தடலாடியான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
அதன்படி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு இலவச கலர் டிவி வழங்கப்படும். ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு மாதம் 25 கிலோ கோதுமை, 10 கிலோ அரிசி, 5 கிலோ சர்க்கரை, 4 கிலோ பருப்பு, 15 லிட்டர் மண்ணெண்ணை ஆகியவற்றை இலவசமாக வழங்குவோம் என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சிறுபான்மையினர் மற்றும் ஆதரவற்றோருக்கு வீடு கட்ட கூட்டுறவு வங்கிகள் மூலம் கடனுதவி, சச்சார் கமிட்டியின் பரிந்துரைகள் அமலாக்கப்படும், 46 லட்சம் தரிசு நிலத்தைப் பிரித்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்படும் எனவும் காங்கிரஸ் கட்சி தடாலடியாக அறிவித்துள்ளது.
மின்சாரம் திருடியதாக விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும், விவசாயப் பணிகளுக்கு தினசரி 14 மணி நேரம் தடையில்லா மின்சார விநியோகம் ஆகிய அறிவிப்புகளையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடி தேர்தல் வாக்குறுதிகள் குஜராத் தேர்தல் களத்தை படு சூடாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications