கிராமங்களில் வேலை பார்க்க கசக்கிறதா?: எங்கிருந்து வந்தீர்கள்?- ராமதாஸ் ஆவேசம்
விழுப்புரம்: கிராமங்களில் வேலை பார்க்க உங்களுக்கெல்லாம் கசக்கிறதா? நீங்கள் எல்லாம் எங்கிருந்து வந்தீர்கள், உன் அம்மா, பாட்டிக்கு எங்கே பிரசவம் நடந்தது? என்று போராட்டம் நடத்தும் மருத்துவ மாணவர்களை நோக்கி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆவேசமாக கேள்வி கேட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததை கண்டித்து பாமக சார்பில் ராமதாஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது,
நாம் நாட்டில் வாழ்கிறோமா? காட்டில் வாழ்கிறோமா? அரசாங்கம் இருக்கிறதா? மருத்துவத்துறை இருக்கிறதா? ஆடு, மாடுகளுக்கு கூட ஒழுங்காக சிகிச்சை நடக்கிறது. கிளிக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்றால், மேனகா காந்தி நாடாளுமன்றத்தில் குதிக்கிறார். மனிதர்களை பற்றி அவர் கவலைப்படுவதில்லை.
சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்கிறோம். 60 ஆண்டுகள் ஆகியும் சிகிச்சையளிக்க டாக்டர்கள் இல்லை என்றால் கேவலம், அசிங்கம், இழுக்கு இல்லையா?
ஏழையாக பிறந்தது தவறா. கிராமத்தில் பிறந்தது தப்பா? அவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? தனியார் டாக்டரிடம் ரூ.100 இல்லாமல் போக முடியுமா? ஏழைக்கு சிகிச்சையளிக்க முடியவில்லை. அரசுக்கு செலவாகிறது என்றால் மருத்துவமனையை மூடிவிடுங்கள்.
அதற்கு பதிலாக வரிசையாக, டாஸ்மாக் கடையை திறந்து விடுங்கள். ரூ.7,440 கோடி வருவாயை நம் மாநிலத்து மக்கள் மது அருந்திவிட்டு அரசுக்கு கொடுக்கின்றனர்.
அந்த அம்மா 4,000 கடை என்றால், இவர் நான் என்ன சளைத்தவரா என்று 8,000 மதுக்கடைகளை திறக்கிறார். குடித்துவிட்டு வயிற்றுவலி வந்து மருத்துவமனைக்கு வந்தால், சனியனே ஏன் கத்துகிறாய், நாயே கம்முனு இரு என்று திட்டுகின்றனர் மருத்துவமனை ஊழியர்கள்.
மக்கள் வரிப்பணம் ரூ.15 லட்சத்தில் எம்.பி.பி.எஸ் படிக்கிறவர்களை 1 வருடம் கிராமங்களில் வேலை செய்யுங்கள் எனச் சொன்னால் எவ்வளவு எதிர்ப்பு.
கிராமங்களில் வேலை பார்க்க கசக்கிறதா? எங்கிருந்து வந்தாய்? உன் அம்மா, பாட்டிக்கு எங்கே பிரசவம் நடந்தது? கொல்லைமேட்டில், ஏரியில், கழனியில் பிரசவம் நடந்தது. அதை மறந்துவிட்டு இன்று நான் கிராமத்துக்கு போக மாட்டேன் என்கின்றனர். ஆனால் இவர்களுக்கு அரசு ரூ.15 லட்சம் செலவு செய்கிறது. இவர்கள் கட்டும் கட்டணம் வெறும் ரூ.4,000 மட்டும் தான்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பவர்கள், ரூ.4 லட்சம் முதல் 7லட்சம் வரை 1 வருடத்திற்கு செலுத்துகிறார்கள். அந்த படிப்புக்கு சேரவே ரூ.30 லட்சம் முதல் 40 லட்சம் வரை லஞ்சமாக தர வேண்டும். அரசுக் கல்லூரிகளில் ரூ.4,000த்தில் படிப்பவர்கள் தான், கிராமத்துக்கு போக மாட்டேன் என்கின்றனர்.
ஓராண்டுக்கு வேலை செய்தால் தலை மொட்டையாகிவிடும் என்கிறான். மக்களோட பணத்தை மொட்டை அடித்துத் தானே அவர்களின் வரிப் பணத்தில் படிக்கிறாய். பாமக சார்பில் தீர்மானம் போட்டு டாக்டர்கள், செவிலியர்கள் எங்கெல்லாம் இல்லையோ அங்கு போராட்டம் நடத்தப் போகிறோம்.
திமுக தேர்தல் அறிக்கையில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை மருத்துவமனைகளை எய்ம்ஸ் தரத்துக்கு கொண்டு வருவோம் என்றனர். ஆனால் இங்கு டாக்டர் இல்லை. டெபுடேஷனில் வந்தவர்கள் நாளைக்கு இருக்க மாட்டார்கள்.
அமைச்சர்களும், மற்றவர்களும் உடல் நலம் பாதிக்கப்பட்டால் தனியார் மருத்துவமனையில் படுத்துக்கொள்கின்றனர். சென்னை அரசு மருத்துவமனையில் படுக்க வேண்டியது தானே.
தேசிய சுகாதார திட்டம் கடைக்கோடி மனிதனுக்கும் நல்ல மருத்துவ வசதி கிடைப்பதற்கான திட்டம். அதைத்தான் அன்புமணி செய்து வருகிறார்.
அரசுக்கு சொல்கிறேன். உடனடியாக எல்லா இடங்களுக்கும் டாக்டர்களை நியமிக்க வேண்டும். எம்.பி.பி.எஸ் படித்த 15,500 பேர் பல வருடங்களால வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். இவர்கள் கிராமப்புறங்களில் வேலை செய்யத் தயார்.
மக்கள் விழிப்படைந்து விட்டனர். விளைந்ததை தின்று விதி வந்தால் போய்விடுவோம் என்ற நிலை மாறிவிட்டது. இங்கே மாணவர்களை சிலர் தூண்டி விடுகின்றனர். காதில் பூ வைத்துக் கொண்டு போகின்றனர். யார் உனக்கு பூவைத்து விட்டது. இவர்கள் ஏழை மக்களுக்கு பூ சுற்றுகின்றனர்.
மருத்துவம் செய்வது அடிப்படை உரிமை. தகுந்த மருத்துவம், சிறந்த மருத்துவம் என்பது அடிப்படை உரிமை. மனித அடிப்படை உரிமையான மருத்துவ வசதியை செய்யாததால் அடிப்படை உரிமை மீறப்படுகிறது என இந்த அரசை பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications