கைதான தமிழர்களை விடுவிக்க ராஜபக்சே உத்தரவு
கொழும்பு: கொழும்பில் திடீரென கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை விடுதலை செய்யுமாறு அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பில் சமீபத்தில், அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் பெண் விடுதலைப் புலி ஒருவர் தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்டார்.
இந்த சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து கொழும்பில் தற்கொலைப் படை மனித குண்டுகள் ஊடுறுவியிருக்கலாம் என்று பீதியடைந்த இலங்கை போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்த நடவடிக்கையின்போது கொழும்பில் வசித்து வரும் அப்பாவித் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக கைது செய்யப்பட்டனர். வீடு வீடாக சென்று தமிழர்களை போலீஸார் கைது செய்தனர். 3000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
எந்தவித குற்றச் செயலிலும் தொடர்பில்லாத அப்பாவித் தமிழர்கள் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்தது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்யுமாறு அதிபர் ராஜபக்சே காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் கைதானவர்கள் தவிர ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறையில் வாடி வரும் தமிழர்களையும் விடுதலை செய்யுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications