சச்சின் ரூ.1.66 கோடி வரி பாக்கி!
டெல்லி: இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரூ.1.66 கோடி வருமானவரி பாக்கி வைத்துள்ளதாக மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், சச்சினுக்கு விதிக்கப்பட்ட வரி பாக்கியை அவர் ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
பிற, முதல் தர கிரிக்கெட் விளையாடும் வீரர்களின் வருமான வரி பாக்கி குறித்த விவரம் அரசிடம் இல்லை என்றார்.
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கரின் ஆடிட்டர் சைலேஷ் பட்கர் கருத்து தெரிவிக்கையில், சச்சினுக்கு அயல்நாட்டிலிருந்து வரும் வருமானம் தொடர்பான வரியைத்தான் அமைச்சர் கூறியுள்ளார்.
அரசு அனுமதித்துள்ள வரி விலக்கின்படி தற்போது சச்சின் வரியைச் செலுத்தி வருகிறார். இதுவரை 50 சதவீத வரியை செலுத்தி விட்டார்.
இந்த வரி விதிப்பு தொடர்பாக வருமான வரித்துறை மேல் முறையீட்டு ஆணையரிடம் அப்பீல் செய்துள்ளோம். அதன் மீதான தீர்ப்பு வந்த பிறகு மீதம் உள்ள தொகையை செலுத்துவோம்.
ஒருவேளை சச்சினுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துவிட்டால், இதுவரை செலுத்திய வரித் தொகையை வருமானவரி துறை திரும்பி கொடுக்க வேண்டும் என்றார் பட்நாகர்.