For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்: போலி என்கவுண்டரில் 22 பேர் கொலை!!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: சொராபுதீன் ஷேக் மட்டுமல்லாது குஜராத்தில் 22 பேர் போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு குஜராத்தை மட்டுமல்லாது நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவம் சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம். அத்தோடு அவரது மனைவியும் கடத்தப்பட்டு உயிரோடு எரித்துக் கொடூரமாக கொல்லப்பட்டதாக பின்னர் தகவல்கள் வெளியாகின

இதுதொடர்பாக ஷேக்கின் சகோதரர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சொராபுதீன் ஷேக் கொல்லப்பட்டது நியாயமானதுதான் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசப் போக இப்போது தேர்தல் பிரச்சினையாக ஷேக் படுகொலை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த நிலையில் ஷேக் மட்டுமல்லாது மொத்தம் 22 பேர் போலி என்கவுண்டர் மூலம் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பதாக புதுத் தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷேக்கைக் கொன்றதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள டிஐஜி வன்சாரா மற்றும் அவரது தலைமையிலான தீவிரவாத தடுப்புப் பிரிவுதான் மற்றவர்களையும் கொன்று குவித்துள்ளது.

அனைவருமே மோடியைக் கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சமீர் கான் பதான், சாதிக் ஜமால், இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் என மொத்தம் 22 பேர் இந்த போலி என்கவுண்டர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

திரைப்பட இயக்குநர் சுப்ரதீப் சக்ரவர்த்தி என்பவர் Encountered On Saffron Agenda என்ற பெயரில் ஒரு டாக்குமெண்டரியை உருவாக்கியுள்ளார். அதில்தான் இந்த திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சக்கரவர்த்தி கூறுகையில், குஜராத் போலீஸார், லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முஹம்மது தீவிரவாதிகள் என்ற பெயரில் கொன்றவர்கள் அனைவருமே அப்பாவிகள். மோடியைக் கொல்ல முயன்றதாக கூறி இவர்களை குஜராத் போலீஸார் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இதை கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கொடுத்த வாக்குமூலங்கள், அவர்களின் வக்கீல்கள், தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளேன் என்றார்.

இவர்களில் இஷாந்த் ஜஹாவுக்கு 19 வயதுதான் ஆகிறது. மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் இவர். அதேபோல ஜாவேத் ஷேக் என்கிற பிரணீஷ் பிள்ளை, புனேவைச் சேர்ந்த தொழிலதிபர். இருவரும் 2004ம் ஆண்டு ஜூன் மாதம் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.

இந்த டாக்குமெண்டரியில் பேசியுள்ள ஜாவேத் ஷேக்கின் தந்தை கோபிநாதன் பிள்ளை கூறுகையில், சம்பவத்தன்று நான்கு தீவிரவாதிகள் சேர்ந்து போலீஸ் படையினரை சரமாரியாக சுட்டதாக போலீஸார் கூறுகின்றனர். இது எப்படி சாத்தியமாகும். நான்கு பேர் சேர்ந்து மிகப் பெரிய போலீஸ் படையை சுட முடியுமா?

ஜாவேத் வண்டியை ஓட்டியபடியே போலீஸாரை சுட்டாராம். அவருடன் இருந்த ஒரு பெண்ணும் சுட்டாராம். மற்ற இருவரும் கூட போலீஸாரை நோக்கி சரமாரியாக சுட்டார்களாம். ஆனால் இத்தனை பேர் சுட்டும் ஒரு நாய் கூட அன்று சாகவில்ைல என்று கோபத்துடன் கேட்கிறார்.

இஷ்ராத் ஜஹானின் சகோதரி முஸாரத் கூறுகையில், காரில் ஒரு பெண் அமர்ந்திருந்த நிலையில் சுடப்பட்டால், அந்தப் பெண்ணின் கை, வயிறு, உடலின் பக்கவாட்டுப் பகுதிகளில் குண்டு பாய்ந்திருக்க வேண்டும். ஆனால் எனது சகோதரியின் கால்களில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளன.

எனது சகோதரியை போலீஸார் கற்பழித்துள்ளனர். இதை மறைக்க அவளை சுட்டுக் கொன்றுள்ளனர் என்று குமுறுகிறார்.

இதேபோல மும்பையைச் சேர்ந் சாதிக் ஜமால் கடந்த 2003ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். வன்சாராதான் இவரைக் கொன்றார்.

சாதிக்கின் உறவினரான மூசா பாய் கூறுகையில், ஒரு என்கவுண்டர் நடக்கும்போது அதை யாருமே பார்த்திருக்க மாட்டார்களா?. குறைந்தது குண்டு சத்தத்தையாவது யாரும் கேட்டிருக்க மாட்டார்களா? என்றார்.

இந்த டாக்குமெண்டரி குஜராத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து குஜராத் அரசும், காவல்துறையும் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X