கிருஷ்ணா நீரை தேக்க வட சென்னையில் 2 புதிய அணைகள்-துரைமுருகன்
சென்னை: ஆந்திராவில் இருந்து கிடைக்கும் கிருஷ்ணா நீரை தேக்கி வைப்பதற்காக வட சென்னையில் ராமஞ்சேரி, திருகடலம் ஆகிய பகுதிகளில் புதிதாக 2 அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
பொதுப்பணித்துறையில் பணியாற்றும் பொறியாளர்களுக்கு அவர்களது பணியை துரிதப்படுத்த 12 ஜீப்புகள், 2 கார்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு எந்த வாகனமும் வழங்கப்படவில்லை.
11வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறைக்கு ரூ.11,000 கோடி ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அது வழங்கப்படும் என்று நம்புகிறோம்.
பாலாறு அணை கட்டியே தீருவோம் என்று ஆந்திர அரசு கூறி வருகிறது. அதை சட்டப்படி எதிர்கொள்வோம். முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணையை கட்டுவோம் என்றும், இதுகுறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியிருக்கிறார்.
இனியும் இது போல லாவணி கச்சேரிகள் நடத்த நாங்கள் விரும்பவில்லை. அணை கட்ட முடியுமா? முடியாதா? என்பது பற்றி எனக்கு தெரியும். தமிழக அரசு மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக கிருஷ்ணா நீர் கொண்டு வரப்பட்டது. தற்போது அதை தேக்கி வைக்க இடமில்லாததால் தண்ணீரை வாங்க முடியவில்லை.
எனவே கிருஷ்ணா நீரை தேக்கி வைப்பதற்காக வடசென்னையில் ராமஞ்சேரி, திருகடலம் ஆகிய பகுதிகளில் 2 அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு சில இடையூறுகள் உள்ளன. அவற்றை போக்கி அங்கு நிச்சயமாக அணை கட்டுவோம் என்றார் துரைமுருகன்.