பள்ளி கம்ப்யூட்டர்களை திருடிய கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் கைது
போடி: வேலியே பயிரை மேய்ந்தது போல, போடிநாயக்கனூரைச் சேர்ந்த நகராட்சி பள்ளியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியராக இருப்பவரே பள்ளிக்கூட கம்ப்யூட்டர்களைத் திருடி கைதாகியுள்ளார்.
போடிநாயக்கனூர், சுப்புராஜ் நகரில் நகராட்சி ஆரம்பப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியராக பணியாற்றுபவர் செந்தில்குமார்.
இவர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்த சிலர் அங்கிருந்த கம்ப்யூட்டர் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடிச் சென்று விட்டதாக கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிரியர் செந்தில்குமார்தான் திருடன் என்று தெரிய வந்து அதிர்ந்தனர்.
தனது நண்பர்களின் உதவியுடன் ஆசிரியர் செந்தில்குமார், தனது பள்ளிக்கூட கம்ப்யூட்டர்களைத் திருடியுள்ளார். இதையடுத்து கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்ளைப் பறிமுதல் செய்த போலீஸார் செந்தில்குமாரையும், அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர்.
வேலை பார்த்த பள்ளிக்கூடத்திலேயே கை வைத்த ஆசிரியரால் போடியில் பரபரப்பு நிலவுகிறது.