அப்துல் கலாமுக்கு வீடு கிடைச்சிருச்சு
டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர் அப்துல் கலாமுக்கு ஒரு வழியாக மத்திய அரசு ஒதுக்கிய வீடு புதுப்பிக்கப்பட்டு 5 மாதங்களுக்கு பிறகு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தனது பதவி காலத்தில் ஜனாதிபதிக்குரிய பாரம்பரிய பழக்க வழக்கங்களை உடைத்தெறிந்து மிக சாதாரணமாக நடந்து கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருடைய அன்பையும் பெற்றவர்.
5 மாதங்களுக்கு முன் கடந்த ஜூலை 25ம் தேதி அவருடைய பதவி காலம் முடிவுக்கு வந்தது. அவருக்கு மத்திய அரசு 10, ராஜாஜி மார்க் வீட்டை ஒதுக்கியது.
அந்த வீட்டை புதுப்பிக்கும் பணியை மத்திய பொதுப்பணித்துறை ஏற்றது. கலாம் இசட் பிரிவு பாதுகாப்பில் இருப்பதால் அதற்கேற்ப வீடும் மாற்றி வடிவமைக்கப்பட்டு வந்தது.
வீடு ரெடியாகும் வரை கலாமுக்கு டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு சிறிய வீடு ஒதுக்கப்பட்டது. அதில் தான் கலாம் இதுவரை தங்கியிருந்தார்.
புதுப்பிக்கும் பணியை விரைவில் முடிக்குமாறு பலமுறை அரசுக்கு கலாம் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டாலும் மத்திய பொதுப்பணித் துறையினரோ வழக்கம் போல் ஆமை வேகத்தில் செயல்பட்டு இப்போது தான் அதை கலாமிடம் ஒப்படைத்துள்ளனர்.