பிரவீன் மகாஜனுக்கு ஆயுள் தண்டனை

மும்பை: பாஜக முன்னணித் தலைவர்களில் ஒருவரான பிரமோத் மகாஜன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அவரது தம்பி பிரவீன் மகாஜனுக்கு மும்பை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார் பிரமோத். பணச் சண்டையில் அவரை சுட்டுக் கொன்றார் தம்பியான பிரவீன் மகாஜன்.
இந்த வழக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி ஸ்ரீஹரி தவரே தீர்ப்பளித்தார்.
அதில், பிரமோத் மகாஜனைக் கொலை செய்தது பிரவீன்தான் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, பிரமோத் மகாஜனை பிரவீன் மகாஜன் சுட்டுக் கொன்றுள்ளது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது என்று கூறிய நீதிபதி அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்தார்.
இந்த வழக்கில் 35 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. இதில் இறந்த பிரமோத் மகாஜனின் மனைவி சாரங்கி மற்றும் அவர்கள் வீட்டு வேலைக்காரர் மகேஷ் வான்கடேயும் முக்கிய சாட்சிகளாவார்.
இந்த வழக்கில் போலீசாரால் 600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக பிரவீன் மகாஜனுக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று அரசு சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் உஜ்வால் நிகாம் வாதிட்டார். இவர்தான், மும்பை குண்டுவெடிப்பு வழக்கிலும் அரசு சிறப்பு வக்கீலாக செயல்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
பிரவீனால் சுடப்பட்ட பிரமோத் மகாஜன், 12 நாட்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி பின்னர் மரணமடைந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications