'புலிகள்': போலி வழக்குகளை வாபஸ் பெற பழ.நெடுமாறன் கோரிக்கை
மதுரை: விடுதலைப் புலிகள் என்ற பெயரில் பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் கோரியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் விடுதலைப்புலிகள் நடமாட்டம் இல்லை என்று இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு செயலாளர் எம்.கே. நாராயணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதுவும் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின்பு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 12ம் தேதியன்று இந்திய ராணுவத்தின் தென் மண்டல தளபதி லெப். ஜெனரல் நோபுல் தம்புராசும் இதைத் தான் தெரிவித்தார்.
இந்தியாவின் பாதுகாப்பு குறித்து முக்கியப் பொறுப்பில் உள்ள 2 அதிகாரிகளே தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இல்லை என்றும், புலிகள் ஊடுருவல்கள் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் உள்ள கியூப் பிரிவு போலீசார் இங்குள்ள சிலரை விடுதலைப் புலிகள் என்று கூறி பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். இந்தியாவின் பாதுகாப்பில் உள்ள அதிகாரிகள் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இல்லை என்கிறார்கள்.
ஆனால் தமிழக போலீசார் விடுதலைப் புலிகள் என கூறி பொய் வழக்குகள் தொடுத்துள்ளனர். இதன் மூலம் அவ்வழக்குகள் போலியானவை என தெளிவாகின்றது.
எனவே மேற்கண்ட பொய் வழக்குகளை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். மேலும் பொய் வழக்கு தொடர்ந்த அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல் அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.












Click it and Unblock the Notifications