நெல்லை பைபாஸ் ரோட்டில் ரூ.16 கோடியில் புதிய மேம்பாலம்
நெல்லை: நெல்லையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.16 கோடியில் பைபாஸ் ரோட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து நெல்லை மேயல் ஏ.எல் சுப்பிரமணியன் கூறியதாவது,
நெல்லையில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது இதனால் நெல்லை மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வண்ணார்ப்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தோம்.
இதனை பரிசீலித்த முதலமைச்சர் கருணாநிதி கடந்த முறை நெல்லை வந்தபோது வண்ணார்பேட்டை பைபாஸில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சர், நெடுஞ்சாலைதுறை அமைச்சர், நிதிதுறை செயலாளரை நான் அடிக்கடி சந்தித்து பேசினேன்.
பின்னர் மேம்பாலம் அமைக்க ரூ.17.75 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. இதையடுத்து முக்கிய செலவினங்களை தவிர சிலவற்றை குறைத்து பாலம் அமைக்க ரூ.16.40 கோடி ஆகும் என முடிவு செய்யப்பட்டது.
தற்போது பாலம் அமைக்க தொழில்நுட்ப மற்றும் நிர்வாக அனுமதி ஆகியவை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
வண்ணார்பேட்டை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இருந்து துவங்கும் இந்த மேம்பாலம் மறுபுறம் எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரி அருகே முடிவடைகிறது. இது இரண்டு வழிப்பாதையாக அமைக்கப்பட்டாலும் போக்குவரத்தை கணக்கில் கொண்டு நான்கு வழிப்பாதையாக மாற்றலாம் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications