தமிழகம் வரும் 24,200 மெட்ரிக் டன் ஜோர்டான் உரம்
சென்னை: ஜோர்டான் நாட்டிலிருந்து 24 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் டிஏபி உரம் இன்று தமிழகத்திற்கு இறக்குமதியாகி வருகிறது.
தமிழகத்தில் பெரும் உரத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், குறிப்பாக டிஐபி உரம் கிடைக்காத நிலை இருப்பதாகவும் சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இதை அரசு மறுத்திருந்தது.
இந்த நிலையில், ஜோர்டான் நாட்டிலிருந்து தமிழகத்திற்கு டிஏபி உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 24 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் உரம் ஜோர்டானிலிருந்து தமிழகத்திற்கு வருகிறது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த நவம்பர் 23ம் தேதி உரத் தேவை குறித்து முதல்வர் கருணாநிதி, மத்திய உரத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து ஜோர்டானிலிருந்து உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த உரம் இன்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேருகிறது. உரம் வந்து சேர்ந்தவுடன் உடனடியாக விவசாயிகளுக்கு வழங்குவதற்காக அனுப்பி வைக்கப்படும்.
தமிழகத்தில் டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலான கால கட்டத்தில் 77 ஆயிரம் மெட்ரிக் டன் உரம் தேவைப்படும். ஜனவரி மாதத்தில் 33 ஆயிரத்து 750 மெட்ரிக் டன் உரம் தேவைப்படும். இதைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியன் பொட்டாஷ் நிறுவனத்திடமிருந்து 17 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் டிஏபி உரத்தை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 15 ஆயிரத்து 210 மெட்ரிக் டன் உரம், ஸ்பிக், மங்களூர் கெமிக்கல்ஸ் மற்றும் பெர்ட்டிலைசர்ஸ், இப்கோ ஆகிய நிறுவனங்களிடமிருந்து பெறப்படும்.
இந்த ஏற்பாடுகள் மூலம் தமிழகத்தில் உரத் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.