இலங்கையுடன் கூட்டு வான் ரோந்து - இந்தியா முடிவு!
இந்திய பாதுகாப்புத் துறைச் செயலாளர் விஜய் சிங் தலைமையிலான உயர் மட்டக் குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வந்தது. இந்தக் குழுவினர் இலங்கை முப்படைத் தளபதிகளையும், பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவையும் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின்போது விடுதலைப் புலிகளுடனான போர் குறித்து விவாதிக்கப்பட்டது. இலங்கை அரசுக்கு என்ன மாதிரியான உதவிகள் வேண்டும் என்றும் அப்போது கேட்கப்பட்டது. மேலும் விடுதலைப் புலிகளின் வான் பலம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக, இலங்கையுடன் இணைந்து கூட்டு வான் ரோந்தில் ஈடுபட இந்தியா முன்வந்துள்ளது. விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலை முறியடிப்பதற்காக இந்த ஒத்துழைப்பைத் தர இந்தியா முன்வந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வந்த இந்திய குழு புதன்கிழமை தனது பயணத்தை முடித்துக் கொண்டு கிளம்பியது.
இலங்கை அரசு ஏற்கனவே, இந்தியா மற்றும் அமெரிக்காவிடமிருந்து ரேடார் சாதனங்களைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளிடமிருந்து விமான பாதுகாப்பு உதவிகளைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், கொழும்பு வந்த இந்தியக் குழுவிடம், இந்தியாவுடன் இணைந்து வான் ரோந்தில் ஈடுபட இலங்கை விருப்பம் தெரிவித்தது. இதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து இலங்கை தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் இந்த முடிவு வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு அதன் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இந்தியக் குழுவின் இலங்கை பயணத்தின்போது விடுதலைப் புலிகளின் விமான பலம் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
திருவனந்தபுரத்திலிருந்து ..
இலங்கையுடனான கூட்டு வான் ரோந்து நடவடிக்கைகளை, திருவனந்தபுரம் விமானப்படை தளத்திலிருந்து இந்தியா மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. மேலும் தென் பிராந்தியத்தில் உள்ள விமானப் படை தளங்களையும் இந்தியா ஆயத்த நிலையில் வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதுதவிர ரேடார் கண்காணிப்பையும் நவீனப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்திய வான் எல்லைக்குள் விடுதலைப் புலிகளின் விமானங்கள் ஊடுறுவாமல் தடுக்க முடியும் என இந்தியா கருதுகிறது.
சமீபத்தில் ரஷியாவைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குழுவும் இலங்கை வந்தது. ரஷியாவிடமிருந்தும் இலங்கை பல்வேறு ராணுவ உதவிகளைப் பெறத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.