பெண்களின் கற்பை சூறையாடிய போலிச் சாமியார்
சென்னை: மதுரை வீரன் சாமி ஆலயம் என்ற பெயரில் கோவிலை கட்டி, அதன் மூலம் பல பெண்களின் கற்பை சூறையாடி, பண மோசடி செய்து, சில பெண்களை நரபலி கொடுக்கவும் திட்டமிட்டு, இறுதியாக பெண் டாக்டர் ஒருவரை கடத்திச் சென்று மணந்த போலிச் சாமியார் மீது பரபரப்பு புகார்கள் குவிந்து வருகின்றன. அவரைப் பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனர்.
சென்னையில் வேளச்சேரி, விஜயநகர் பகுதியில் துர்கா ஆசிரமம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் பழனிச்சாமி (48). நீண்ட காலமாக பக்தர்களுக்கு குறி சொல்லி வந்த சாமியார், வந்த வருமானத்தை வைத்து வட்டிக்கு விடும் தொழிலையும் செய்து வந்துள்ளார்.
சாமியார் பழனிச்சாமிக்கு ஏற்கனவே சந்திரா (50), மணிமேகலை (35) என்ற இரு மனைவிகள் இருக்கும் நிலையில் தற்போது திவ்யா என்ற இளம் பெண்ணை 3வதாக திருமணம் செய்துள்ளார். இவர் ஒரு டாக்டர்.
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் திவ்யா. குறி கேட்க வந்தவரை மயக்கி தனது வலையில் வீழ்த்தி கடத்திச் சென்று விட்டார் பழனிச்சாமி என்று திவ்யாவின் தந்தை போஜராஜ் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸில் அவர் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது போலீஸில் நேரில் ஆஜரான திவ்யா, தனது சுய விருப்பத்துடன்தான் திருமணம் நடந்ததாக கூறினார். இதனால் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் விட்டுள்ளனர்.
ஆனால் போஜராஜ் விடவில்லை. மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து ஆணையரின் உத்தரவின் பேரில் சாமியார் குறித்த விசாரணை முடுக்கி விடப்பட்டது. இதைத் தொடர்ந்து சாமியாரின் லீலைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில், சாமியார் பழனிச்சாமியின் முதல் மனைவி சென்னை காவல் துறை ஆணையரிடம் கொடுத்த புகாரில், போதை மருந்தை கொடுத்து குறி கேட்க வரும் பல பெண்களின் கற்பை சூறையாடியவர் பழனிச்சாமி என்று பரபரப்பு புகாரைக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது கணவரின் சொந்த ஊர் திருச்சி அருகேயுள்ள மணப்பாறை. அவருக்கும் எனக்கும் கடந்த 1979ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பழனிச்சாமி 5ம் வகுப்பு தான் படித்துள்ளார்.
திருமணத்தின் போது அவர் ஓய்வுபெற்ற ஐஜி மகாதேவன் வீட்டில் வேலை பார்த்து வந்தார். அவருடன் சேர்ந்து நானும் அங்கு சமையல் வேலை செய்து வந்தேன். அதன்பின்னர் சென்னை வேளச்சேரியில் டீக்கடை ஆரம்பித்து சொந்த வீடு கட்டி நன்றாக வாழ்ந்து வந்தோம்.
எனது கணவன் திடீரென்று ஒரு நாள் என்மீது மதுரை வீரன் சாமி இறங்கியுள்ளார் என்று சொல்லி சாமி ஆடி குறி சொன்னார். அன்று முதல் அவர் சாமி ஆடி பக்தர்களுக்கு குறி சொல்ல ஆரம்பித்தார்.
சாமி ஆடும் போதே சாராயத்தை குடித்துவிட்டு, மாட்டுக் கறி, ஆட்டுக்கறி ஆகியவற்றை தின்றுவிட்டுத் தான் ஆடுவார். அதனால் அவர் சாமி ஆடுவதில் எனக்கு துளியும் நம்பிக்கை கிடையாது. அதனால் என்மீது கோபம் கொண்டு அடித்து உதைப்பார்.
இவர் குறி சொல்வதை நம்பி ஏராளமானோர் வர ஆரம்பித்தனர். இதனால் ஏராளமான பணம் அவரிடம் சேர்ந்தது. அதை வைத்து வேளச்சேரியில் விஜயநகர் பகுதியில் இடம் வாங்கி ஆசிரமம் கட்டினார்.
அப்போது தான் கோவிலில் பூ விற்ற மணிமேகலை என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இதை தட்டிக் கேட்ட என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். நானும், மணிமேகலையும் சேர்ந்து தான் வசிக்கிறோம்.
முதலில் குறி மட்டும் சொல்லி வந்த பழனிச்சாமி, பின்னர் கேரளா சென்று மந்திர வேலைகளை கற்றுக் கொண்டு பில்லி, சூனியம், ஏவல் போன்ற வேலைகளில் இறங்கினார்.
கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் டாக்டர் திவ்யா என்பவர் தனது பெற்றோருடன் வந்து எனது கணவரை சந்தித்தனர். ஆனால் திவ்யாவை வசியம் செய்து அவரை தனியே வரவழைத்து பூஜைகளில் கலந்து கொள்ளச் செய்தார். பின்னர் நாளடைவில் திவ்யா எனது கணவரின் காம வலையில் விழுந்துவிட்டார்.
நரபலிக்கு முயற்சி:
கன்னிப் பெண் ஒருவரை திருமணம் செய்து அவரை நரபலி கொடுத்தால் கடவுளை நேரடியாக சென்றடைந்து முக்தி அடையலாம் என்று எனது கணவர் அடிக்கடி கூறுவார். அதற்காக மணிமேகலையை திருமணம் செய்து நரபலி கொடுக்கும் வேலைகளில் முயன்றபோது நான் தடுத்துவிட்டேன்.
தற்போது டாக்டர் திவ்யாவை திருமணம் செய்துள்ளார். எனவே அவரை எனது கணவர் பழனிச்சாமி நரபலி கொடுத்துவிடுவார் என்று அச்சம் எழுந்துள்ளதால், போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து அவரை காப்பாற்ற வேண்டும்.
தீர்த்தம் கொடுத்து கற்பு சூறை:
குழந்தை வரம் கேட்டு வரும் பெண்களுக்கு விசேஷ பூதை செய்வதாக கூறி தீர்த்தத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்து அவர்களை குடிக்கச் செய்வார். சிறிது நேரத்தில் அவர்கள் மயக்கமடைந்தவுடன், அவர்களின் கற்பை சூறையாடியதை நான் நேரில் பலமுறை பார்த்துள்ளேன்.
பின்னர் அவர்களை நிர்வாண கோலத்தில் படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறிப்பார்.
இனிமேலும் எனது கணவரால் பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நான் புகார் கொடுத்துள்ளேன். எனது கணவரை போன்ற கடவுள் பெயரை தவறாக பயன்படுத்தி மக்களுக்கு தீமை செய்யும்
போலிச் சாமியார்களை களைந்தெறிய வேண்டும் என்றார் சந்திரா.
பழனிச்சாமியிடம் சிக்கி கற்பிழந்தவர்கள், நாசமடைந்தவர்கள் நிறைய பேர் என்கிறார்கள் அக்கம் பக்கத்தில் வசிக்கும் பெண்கள். பல பெண்களை விபூதியில் போதை மருந்தைக் கலந்து கொடுத்து வசியப்படுத்துவாராம் பழனிச்சாமி. இதனால் ஒருமுறை வரும் பெண்கள் தொடர்ந்து வர ஆரம்பிப்பார்களாம்.
அவரால் கெட்டுப் போன பெண்கள் பலரும் குடும்பப் பெண்கள் என்பதால் துணிச்சலுடன் புகார் கொடுக்க வர முடியாமல் வேதனையில் உழன்று கொண்டிருக்கிறார்களாம். பழனிச்சாமியைக் கைது செய்து விசாரித்தால்தான் உண்மை தெரிய வரும் என்றும் அப்பகுதியினர் கூறுகிறார்கள்.
இதற்கிடையில் திவ்யாவின் தந்தை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியில் சென்ற எனது மகள் திவ்யா திரும்பி வரவில்லை. இதுபற்றி அவளிடம் போனில் தொடர்பு கொண்ட போது, நான் கடிதம் எழுதி வைத்துள்ளேன்.
அதை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாள். கடிதத்தை பார்த்தபோது நான் ஆன்மீக வழிக்கு போகிறேன். என்னை தேடாதீர்கள் என்று எழுதியிருந்தாள்.
அப்போது தான் பழனிச்சாமி அவளை ஏமாற்றி கடத்தி சென்று திருமணம் செய்தது எங்களுக்கு தெரியவந்தது. விமானத்தில் எனது மகளை டெல்லிக்கு அழைத்து சென்றிருக்கிறார். போலீஸ் தேடுவதை அறிந்ததும் பழனிச்சாமி, எனது மகளை மட்டும் விமானத்தில் சென்னை அனுப்பி காவல் நிலையத்தில் சரண் அடைந்து விட்டார்.
எனது மகளுக்கு அவருக்கும் 24 வயது வித்தியாசம் உள்ளது. எப்படி அந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளமுடியும் எனது மகளின் உயிருக்கு பழனிச்சாமியால் ஆபத்து உள்ளது. எனது மகளை பழனிச்சாமியிடம்
இருந்த மீட்கும் வரை ஓய மாட்டேன் என்று அவர் புகார் மனுவில் கூறியுள்ளார்.
இந்த இரண்டு புகார்களின் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பழனிச்சாமியைப் பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications