கருத்துக் கணிப்புகள் மீது நம்பிக்கையில்லை-விஜயகாந்த்

சென்னை: உச்சாணிக் கொம்புக்கு தூக்கிவிட்டு கீழே தள்ளிவிடுவது தான் கருத்துக் கணிப்புகள். அதனால் எனக்கு கருத்துக் கணிப்புகள் மீது நம்பிக்கை இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் தேமுதிக சார்பில் 500 ஏழைகளுக்கு ஆட்டு இறைச்சி (குர்பானி) வழங்கும் விழாவில் விஜயகாந்த் பேசியதாவது,
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். முஸ்லீம் மக்களுடன் நட்புறவாக இருக்க வேண்டும் என்பதற்காக தேமுதிக சார்பில் குர்பானி கொடுக்கிறோம். இதுவரை மற்ற எந்தவொருக் கட்சியும் இதுபோல செய்தது கிடையாது. மற்ற கட்சிகளுக்கு முன் உதாரணமாக தேமுதிக விளங்குகிறது.
கருத்துக் கணிப்பில் மக்களிடம் தேமுதிக 40 சதவீதம் செல்வாக்கு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்புகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம், உச்சாணி கொம்புக்கு தூக்கிவிட்டு கீழே தள்ளிவிடுவது தான் கருத்துக் கணிப்புகள்.
டெல்லிக்கு சென்ற முதல்வர் கருணாநிதி வேலையில்லாத் திண்டாட்டம், மலேசியத் தமிழர் பிரச்சனை பற்றி பேசாமல் மெளவுனமாக இருந்ததற்கான மர்மம் தெரியவில்லை. காங்கிரசுடன் நாங்கள் நட்புடன் இருப்பதைக் கண்டு திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. எங்கே, நாங்கள் காங்கிரசுடன் கூட்டணி வைத்து விடுவோமோ என்ற பயத்தில் இருக்கின்றனர் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications