தமிழக போலீஸின் மெத்தனம்: மகளிர் ஆணையம் கண்டனம்
மதுரை: பெண்களுக்கு எதிரான கொடுமை தொடர்பான புகார்களில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவதில் தமிழக போலீஸார் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நிர்மலா வெங்கடேசன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கணவர் குடும்பத்தாரால் ஓடும் காரிலிருந்து கீழே தள்ளப்பட்டு படுகாயமடைந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு திருச்சியில் பெற்றோர் வீட்டில் சிகிச்சை பெற்று வரும் ஜெனிதாவை நேற்று நிர்மலா வெங்கடேசன் நேரில் சந்தித்து நடந்தது குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் மதுரை வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து எங்களுக்கு வந்துள்ள பெரும்பாலான புகார்கள் காவல் துறையினர் மீது தான். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பான புகார்களை பதிவு செய்து விசாரணை நடத்த அவர்கள் மெத்தனம் காட்டுகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களுக்கு ஆலோசனை சொல்வதற்கு தனியாக மகளிர் பிரிவை அமைக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு உத்தரவிட்டும் கூட அதை தமிழக அரசு செய்யாமல் உள்ளது.
தமிழக அரசு ஏராளமான பெண் போலீசாரை நியமனம் செய்துள்ளது. இது பாராட்டுக்குரியது.
திருச்சி பெண் ஜெனிதா, அமெரிக்காவில் அவரின் கணவர் குடும்பத்தினரால் ஓடும் காரிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டுள்ளார். இதற்காக அமெரிக்காவில் உள்ள அவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் முயற்சிகளை எடுக்கும் என்றார் நிர்மலா.