எம்.ஜி.ஆர். நினைவு நாள்-ஜெ. அஞ்சலி
சென்னை: மறைந்த முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 20வது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் அனுசரிக்கப்பட்டது. சென்னை கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி மரணமடைந்தார். அவர் மரணமடைந்து இன்றுடன் 20 வருடங்கள் ஆகிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் எம்.ஜிஆர். பக்தர்கள், அதிமுகவினர் எம்.ஜி.ஆர். படங்களுக்கு மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தெரு முனைகள், முக்கிய சாலைகள், கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
சென்னையில் உள்ள எம்.ஜிஆர். நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக அண்ணா சாலையிலிருந்து எம்.ஜி.ஆர். நினைவிடம் வரை அதிமுக சார்பில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.
இதேபோன்ற அமைதிப் பேரணிகள் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் நடத்தப்பட்டன. எம்.ஜி.ஆர். சிலைகள் அலங்கரிக்கப்பட்டு அவற்றுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன.
அன்னதானம், மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள், கோவில்களில் சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதிமுகவைத் தொடங்கிய பின்னர் 1977ம் ஆண்டு முதல்வர் பொறுப்புக்கு உயர்ந்த எம்.ஜி.ஆர். மரணமடையும் வரை தொடர்ந்து அப்பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் அஞ்சலி:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை, கோயம்பேட்டில் உள்ள தனது கட்சி அலுவகத்தில் பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட ஏராளமான தேமுதிக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications