தொழிலதிபரிடம் பணம் பறித்த 3 ஏட்டுகள் கைது - இன்ஸ்பெக்டருக்கு வலை
சென்னை: சென்னை அருகே தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த போலீசார் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இன்ஸ்பெக்டர் தலைமறைவாகி விட்டார்.
சென்னையை அடுத்துள்ள பொன்னேரியை சேர்ந்தவர் ரமேஷ் (39). இவர் தொழில் தொடங்குவதற்காக கடன் வாங்க திட்டமிட்டிருந்தார். அவரிடம், கரூரை சேர்ந்த புல்லட் மணி என்பவர் அறிமுகம் ஆனார்.
நெருக்கமாக பழகிய மணியிடம், தனக்கு தொழில் தொடங்க பணம் வேண்டும் என்று ரமேஷ் கூறியுள்ளார். உடனே மணி, தனக்கு தெரிந்த நண்பரான பன்னீர்செல்வம் என்பவர் ஆலங்குடியில் இருக்கிறார். அவரிடம் எத்தனை கோடி வேண்டுமானாலும் கடன் வாங்கலாம் என கூறியுள்ளார்.
உடனே ஆலங்குடி சென்று மணியின் நண்பர் பன்னீர்செல்வத்தை பார்த்த ரமேஷ் ரூ.10 கோடி கேட்டுள்ளார். அதற்கு அவர், எவ்வளவு கடன் வாங்கி கொடுத்தாலும் 10 சதவீதம் கமிஷன் எனக்கு தரவேண்டும் எனக் கூறியுள்ளார்.
தொழில் தொடங்க அதிக பணம் தேவை என்பதால் சரியென்று தலையாட்டிய ரமேஷ் கடன் தொகை ரூ.10 கோடி வருகிற ஆசையில் முன்னரே ரூ.27 லட்சம் கமிஷன் தொகையை பன்னீர்செல்வத்திடம் கொடுத்துள்ளார்.
இதுபோக, கூடுதல் கமிஷன் தொகையாக ரூ.21 லட்சம் பணத்தை பன்னீர்செல்வத்திடம் கொடுப்பதற்காக தனது நண்பருடன் ஆலங்குடியில் உள்ள தனது பன்னீர் செல்வத்தின் அலுவலகத்திற்கு சென்றார் ரமேஷ்.
அவரிடம் பணத்தை கொடுத்துவிட்டு இன்னும் உள்ள மீதி கமிஷன் தொகையை நீங்கள் கடன் வாங்கிக் கொடுக்கும் ரூ.10 கோடியில் இருந்து எடுத்துக் கொள்ளவும் எனக் கூறியுள்ளார்.
சரியென்று சொன்ன பன்னீர்செல்வம், இந்த பணத்தை வீட்டில் வைத்துவிட்டு ரூ.10 கோடியை எடுத்துவருமாறு சொல்லி தனது ஆட்களை அனுப்பியுள்ளார். அவர்கள் புறப்படும் நேரம் பார்த்து ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் 3 ஏட்டுகளும் வந்து அவர்களை பிடித்துள்ளனர். ஆனால் பன்னீர்செல்வம் ரமேஷ் கொடுத்த பணத்துடன் எஸ்கேப் ஆகி விட்டார்.
இதைப் பார்த்த ரமேஷும், அவருடன் வந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துள்ளனர். இதைப் பார்த்த போலீஸார், ஹவாலா பரிவர்த்தனை நடக்கிறதா என்று கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் ரமேஷ் மற்றும் நண்பர்கள் வைத்திருந்த
ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை போலீசார் பறித்துக் கொண்டனர்.
இதைப்பற்றி யாரிடமாவது சொன்னால் கள்ள நோட்டு மாற்றிய வழக்கில் சிறைக்கு போக வேண்டியது தான் என்று கூறியுள்ளனர்.
அதிர்ச்சி ேமல் அதிர்ச்சி வந்து தாக்கிய சோகத்தில், ரமேஷ், நடந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை எஸ்பியிடம் புகார் செய்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் ஏட்டுகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமறைவாகி விட்டார்.
மேலும், ரமேஷிடமிருந்து பணத்தைப் பறித்துச் சென்ற பன்னீர் செல்வத்தையும், அவரை அறிமுகப்படுத்திய புல்லட் மணியையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.