நிலங்கள் சுருட்டும் அறக்கட்டளைகள்-அமைச்சர்
சென்னை: அறக்கட்டளை என்ற பெயரில் ஏராளமான நிலத்தை வாங்கி தனியாருக்கு விற்பதை தடுக்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கில் அவர் பேசுகையில்,
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு நிரந்தர திட்டங்களை அமல்படுத்த உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உட்பட பல நிறுவனங்கள் ரூ.4,000 கோடி வழங்கின. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதும், 13 மாவட்ட கலெக்டர்களை அழைத்து சிறப்புக் கூட்டம் நடத்தி இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 13,000 வீடுகள் வரை கட்டிக் கொடுத்தனர். எனினும் முழு அளவில் நிவாரணப் பணிகளை அவர்களால் செய்ய முடியவில்லை. இதையடுத்து, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உள்ளாட்சித் துறை மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 50,000 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி முடியும் தருவாயில் உள்ளது.
சுனாமி பாதிப்பை தவிர்க்க கடற்கரையோரங்களில் மாங்குரோவ் காடுகள் வளர்க்கப்படுகின்றன.
தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் அதிகளவு நிலங்களை தனியார் வாங்க முடியாது. அதற்கான அனுமதியை அரசு தருவதில்லை. ஆனால் அறக்கட்டளை என்ற பெயரில் ஏராளமான நிலத்தை வாங்கி தனியாருக்கு விற்கின்றனர். (இது பாமக நிறுவனர் ராமதாசுக்கு தரப்பட்டுள்ள பதிலாகக் கருதப்படுகிறது)
இதை மத்திய அரசு தான் கட்டுப்படுத்த முடியும். நிலங்கள் வாங்கிக் குவிப்பதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அறக்கட்டளைகள் தொடர்பான சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றார் பெரியசாமி.