நார்வே குழு நாடு திரும்புகிறது!!!
ஓஸ்லோ: விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலக இலங்கை அரசு முடிவு செய்திருப்பதால், இலங்கையிலிருந்து தாயகம் திரும்ப நார்வே அமைதிக் குழு முடிவு செய்துள்ளது.
நார்வே சமரசக் குழுவின் முயற்சியால் கடந்த 2002ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் செய்து கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்ள இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக நார்வே அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவுள்ளது. நோட்டீஸ் அனுப்பிய 14வது நாளில் இந்த ஒப்பந்தம் தானாகவே ரத்தாகி விடும்.
இதனால் இலங்கையில் போர் பெரிய அளவில் வெடிக்கும் என்ற அச்சத்தில் இலங்கைத் தமிழர்கள் உள்ளனர்.
இலங்கை அரசின் இந்த முடிவால் நார்வே அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இலங்கையில் பெரும் போர் வெடிக்கும் என நார்வே அமைச்சரும், முன்பு அமைதிக் குழுவுக்குத் தலைமை வகித்தவருமான எரிக் சோல்ஹீம் கூறியுள்ளார்.
மேலும், இலங்கையிலிருந்து நார்வே தூதுக் குழு நாடு திரும்பவும் தீர்மானித்துள்ளது. இதுகுறித்து எரிக் சோல்ஹீம் கூறுகையில், இலங்கை அரசு ஒப்பந்தத்ைத ரத்து செய்ய தீர்மானித்து விட்டது. இது துரதிர்ஷ்டவசமானது. இலங்கையில் பெரும் போர் வெடிக்கக் கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளதால், இனி நார்வே அமைதிக் குழுவால் அங்கு இருக்க முடியாது. எனவே இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நார்வே குழு கொழும்பிலிருந்து தாயகம் திரும்பும் என்றார் அவர்.
நார்வே குழுவும் இலங்கையிலிருந்து கிளம்ப முடிவு செய்து விட்டதால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படப் போகிறதோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.