இலவச மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டம் தொடக்கம்
சென்னை: மத்திய சுகாதாரத் துறையின் உதவியுடன், தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள இலவச மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
மத்திய சுகாதாரத் துறையின் ஒத்துழைப்புடன், தமிழகத்தில், அரசு சார்பில், இலவச மஞ்சள் காமாலைத் தடுப்பூசித் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல் முறையாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 3 தவணைகளாக தடுப்பூசி போடப்படும். அரசு மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி போடப்படும்.
குழந்தை பிறந்த 15 நாட்களில் முதல் தவணை ஊசியும், 6வது வாரத்தில் 2வது தவணை ஊசியும், 14 வாரத்தில் 3வது தவணை ஊசியும் போடப்படும்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இந்தத் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
ரூ. 7.20 கோடி மதிப்பில் அமல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் 11 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன் பெறுவார்கள்.
அதேபோல ரூ. 6 கோடி செலவில் கிராமப்புறங்களில் மருத்துவ சேவைக்காக 100 நடமாடும் மருந்தகங்களையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
மருத்துவ சேவை கிடைக்காத தொலை தூர கிராமங்களில் வசிப்போருக்கு பயன் கிடைக்கும் வகையில் இந்த நடமாடும் மருந்து வாகனங்கள் பயன்படுத்தப்படும்.
இதுதவிர 1,036 பொது சுகாதார மையங்களில் ரூ. 5.73 கோடி மதிப்பிலான கம்ப்யூட்டர் வழங்குவதையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
பொது சுகாதார மையங்களில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3,000 செவிலியர்களுக்கும் பணி நியமன உத்தரவை முதல்வர் வழங்கினார்.
70 லட்சம் பேருக்கு போலியோ சொட்டு மருந்து:
இதேபோல போலியா சொட்டு மருந்து முகாமையும் முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் இன்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாமுக்கு ஏற்பாடுச செய்யப்பட்டிருந்தது.
தமிழகத்திலும் இதற்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. முதல்வர் கருணாநிதி சென்னையில் இந்த சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்கள், விமான நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உட்பட 40,399 மையங்களில் போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் மூலம் தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.