எல்டிடிஇ ஆதரவு போஸ்டர்களில் தமிழ் நடிகர்கள்!

இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் அரசு ஆதரவு தி டெய்லி நியூஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
லண்டனில் உள்ள அலெக்சாண்ட்ரா பாலஸ் அரங்கில் தைப் பொங்கல் திருநாளையொட்டி ஒயிட் பிஜியன் என்ற அமைப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த அமைப்புக்கு, இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட தமிழர் மறு சீரமைப்புக் கழகத்துடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக டெய்லி நியூஸ் செய்தி கூறுகிறது.
தமிழர் மறு சீரமைப்புக் கழகம், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரித்து கொடுத்தது தொடர்பாக இங்கிலாந்து அரசால் கடந்த ஆண்டு தடை செய்யப்பட்டது.
இந்த அமைப்பு தடை செய்யப்பட்ட பின்னர்தான் ஒயிட் பிஜியன் அமைப்பு உருவானது. அலெக்சாண்ட்ரா பாலஸ் அரங்கில்தான் விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தின் உடல் வைக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் அதே அரங்கில் ஒயிட் பிஜியன் அமைப்பு தைப் பொங்கல் திருநாளையொட்டி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் இது புலிகள் அமைப்புக்கு நிதி சேகரிக்கும் கூட்டமாகும். இந்த நிகழ்ச்சியில், புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்கள் வாங்க 10 லட்சம் பவுண்டுகள் நிதி சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக டெய்லி நியூஸ் தெரிவிக்கிறது.
தைப் பொங்கலையொட்டி அலெக்சாண்ட்ரா அரங்கில் ஜனவரி 12ம் தேதியன்று ஒயிட் பிஜியன் அமைப்பு மாபெரும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பான விளம்பர போஸ்டர்கள் லண்டன் நகரில் உள்ள இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்களின் வணிக நிறுவனங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த போஸ்டர்களில் தமிழ் நடிகர்களின் பெரிய அளவிலான படங்கள் இடம் பெற்றுள்ளன என்று அது கூறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுக்களில் 40 சதவீத டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று விட்டன என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications