புலிகளுடன் இலங்கை நேரடி பேச்சு நடத்த திட்டம்

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே நார்வே முயற்சியால் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்ள இலங்கை அரசு முடிவு செய்து விட்டது.
இதையடுத்து விடுதலைப் புலிகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் போர் நிறுத்தம் தொடர வேண்டும். அதை முழுமையாக அமல்படுத்த புலிகள் தயாராக உள்ளனர் என்று கூறியிருந்தனர்.
ஆனால் புலிகளின் இந்தக் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இதுகுறித்து அதிபரின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், விடுதலைப் புலிகளின் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்காது.
ஒப்பந்தத்ைத அமல்படுத்துவதில் புலிகள் அக்கறை காட்டவில்லை. அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் 9000 முறை புலிகள் அதை மீறியுள்ளனர் என்றார் அவர்.
நேரடிப் பேச்சுவார்த்தை:
இதற்கிடையே, புலிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
இதுகுறித்து அதிபரின் ஆலோசகரும், அவரது தம்பியுமான பாசில் ராஜபக்சே கூறுகையில், அதிகாரப் பகிர்வுக்கான புதிய திட்டம் தயாராகி வருகிறது. அது முடிவானவுடன், அனைத்து கட்சிகளும் ஏற்கும் வகையில் அந்தத் திட்டத்தை உருவாக்குவோம். அதன் அடிப்படையில், விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தவும் தயாராக உள்ளோம்.
அரசின் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் கீழ் பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு அனுப்புவோம்.
புதிய அதிகாரப் பகிர்வுத் திட்டம் தொடர்பான அம்சங்களை விடுதலைப் புலிகளிடம் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்.
அனைத்து இனத்தினரும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லீம்கள் இணைந்து வாழ இந்த அதிகாரப் பகிர்வுத் திட்டம் வழி வகுக்கும்.
விரைவில் நடக்கவுள்ள அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்தத் திட்டத்தை அதிபர் ராஜபக்சே வைக்கவுள்ளார். அவர்கள் அதை ஆராய்ந்து இந்த மாத இறுதியில், அரசிடம் அறிக்கை வழங்குவார்கள் என்றார் பாசில் ராஜபக்சே.












Click it and Unblock the Notifications