ஜல்லிக்கட்டு: களம் இறங்கும் நடிகர் ரித்தீஷ்
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து ஜல்லிகட்டை நடத்தப் போவதாக அறிவித்துள்ள தமிழக வீர விளையாட்டு குழு என்ற புதிய அமைப்பை உருவாக்கியிருப்பது அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனும் நடிகருமான ரித்தீஷ் ஆவார்.
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் தென் தமிழக மக்கள் பெரும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இந்த நிலையில் புதிதாக தமிழக வீர விளையாட்டு குழு என்ற அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் தலைவராக நடிகர் ஜே.கே.ரித்தீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமைச்சர் சுப. தங்கவேலனின் பேரன் ஆவார். சின்னி ஜெயந்த் இயக்கிய கானல் நீர் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது நாயகன் என்ற படத்திலும் 2 நாயகர்களில் ஒருவராக நடித்து வருகிறார்.
புதிய அமைப்பு குறித்து ரித்தீஷ்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் காளைகளை கொடுமைப்படுத்துவதில்லை. எங்களது பிள்ளைகளைப் போலத்தான் கருதி வளர்த்து வருகிறோம்.
இது நமது மூதாதையர்கள் நடத்தி வந்த பாரம்பரிய விளையாட்டு. இதை கலாச்சார பிரதிபலிப்பாகவே கருதுகிறோம். இதை எப்படி இப்போது நிறுத்த முடியும்.
உச்சநீதிமன்றத்தின் தடையை ஏற்றுக் கொள்ள மாட்டோம். திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்கள் நடத்தி வந்த வீர விளையாட்டு இது.
ஏராளமான வெளிநாட்டினரும் கூட இதை கண்டு களிக்கின்றனர். தமிழர்களின் வீரத்தை அவர்கள் மெச்சியுள்ளனர். எனவே திட்டமிட்டபடி இதை நடத்துவோம்.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு மனுக்கள் கொடுத்துள்ளோம் என்றார்.
இந்த அமைப்பின் கவுரவ தலைவராக செந்தில் தொண்டைமான், மாநில செயலாளர்க ஒண்டிராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் ரித்தீஷ் தெரிவித்தார்.
குழுவின் ஒருங்கிணைப்பாளரான ராஜசேகரன் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், விரைவில் அலங்காநல்லூரில் அனைவரும் கூடி முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளோம். மக்களிடம் கருத்து கேட்கவுள்ளோம்.
அதேபோல இந்தப் பிரச்சினையில் தலையிடுமாறு முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுக்கவுள்ளோம் என்றார்.
போலீஸ் குவிப்பு
இதற்கிடையே, அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் பதட்டம் நிலவுவதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.