தென்காசி படுகொலை: 55 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்
தென்காசி: தென்காசியில் 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 55 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 2 தொழிலதிபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தென்காசியில் கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி இந்து முண்ணனி தலைவர் குமார் பாண்டியன் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து பிபரவரி மாதம் தமுமுக மாவட்ட தலைவர் மைதீன் சேட் கான் தாக்கப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இதில் ஹனீபா என்பர் உள்ளிட்டோர் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு வந்தனர். அப்படி வரும்போது, இரண்டு தரப்பினருககும் இடையே கூலக்கடை பஜார் சந்திப்பில் மோதல் மூண்டது.
அதில், சுரேஷ், சேகர், செந்தில், அசன் கனி, பஷீர், நாகூர் மீரான் ஆகிய 6 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் குமார் பாண்டியனின் சகோதரர் சக்தி பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் தொழிலதிபர் வி.டி.எஸ் ரகுமான் பாட்ஷா, கமால் முகைதீன் உள்பட 27 பேர் மற்றும் மோதலில் பலியான அசன் கனி, நாகூர் மீரான், பஷீர் ஆகியோரையும் சேர்த்து மொத்தம் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 7 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் சம்சுதீன், செய்யது அலி, சிக்கந்தர், முகமது இஸ்மாயில், திவான் ஒலி என்ற கதிரவன், சேட் என்ற அயூப், மணி என்ற சாகுல், முருகேசன் என்ற அப்பதுல்லா, நவாஸ், மீரான் மைதீன், தொழிலதிபர்கள் விடிஎஸ் பாட்ஷா, கமால் முகைதீன் ஆகியோர் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
இதே போன்று அலாவுதீன் கொடுத்த புகாரில் சக்தி பாண்டியன், சுரேந்தர் உள்பட 22 பேர் மற்றும் மோதலில் பலியான சேகர், சுரேஷ், செந்தில் ஆகியோருடன் மொத்தம் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 7 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கபிலன், சுப்பிரமணியன், தங்கமாடசாமி, சேகர் ஆகிய நான்கு பேரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
சக்தி பாண்டியன் தரப்பில் 133 பேரும், அலாவுதீன் தரப்பில் 117 பேரும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்ட பக்கங்களில் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தவிர இரண்டு தரப்பிலும் சேர்ந்து 19 பேர் ஜாமீன் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இரு தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்ட 55 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கும் போது அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜாராக வேண்டும். இதனையடுத்து போலீசார் இரண்டு தொழிலதிபர்கள் உள்பட தலைமறைவாக உள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.