200 பவுன் நகை கொள்ளை - சென்னையில் கொள்ளையர்கள் துணிகரம்
சென்னை: சென்னையில் மார்வாடி ஒருவரின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 200 பவுன் நகைகளைத் திருடிச் சென்று விட்டனர்.
சென்னை யானை கவுனி பி.கே.ஜி. தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரகுமார். இவரது மனைவி சர்மிளா (வயது 30). இவர்களது வீடு அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் அமைந்துள்ளது. அடகுத் தொழில் செய்து வருகிறார் மகேந்திர குமார்.
நேற்று மகேந்திரகுமார் தொழில் விஷயமாக ஐதராபாத் சென்றுவிட்டார். வீட்டில் சர்மிளா மட்டும் இருந்தார். மாலையில் வீட்டை பூட்டி விட்டு பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். இரவு 10 மணி அளவில் திரும்பி வந்த அவர் வீட்டில் இருந்த பீரோ கதவு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பீரோவில் இருந்த நகைகள் திருடு போயிருந்தன. மர்ம நபர்கள் உள்ளே புகுந்து நகைகளை திருடிக் கொண்டு போனது தெரிய வந்தது. கொள்ளை போன நகைககள் மதிப்பு 200 பவுன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மொட்டை மாடி வழியாக மர்ம ஆசாமி வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டியது விசாரணையில் தெரிய வந்தது.
போலீசார் பீரோவில் இருந்த கைரேகைகளை சோதித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது யாரையும் பிடிக்கவில்லை. சம்பவ இடத்திற்கு உதவி போலீஸ் கமிஷனர் பாலசந்திரன் விரைந்து வந்து விசாரணை மேற் கொண்டார்.
இதேபோல நேற்று ஒரே நாளில் 3 இடங்களில் திருட்டு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications