சிவகங்கையில் போலீசாரை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு!
சிவகங்கை: சிவகங்கையில் போலீசாரை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் துணை தாசில்தாராக இருப்பவர் காசி. இரு தினங்களுக்கு முன் இரவு இவருக்கும், வழக்கறிஞர் வீரகுமார் என்பவருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் துவங்கிய இந்த மோதல் பின்னர் கைகலப்பில் முடிந்தது. இதில் துணை தாசில்தார் காசி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் சிவகங்கை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கறிஞர் வீரகுமாரை கைது செய்தனர். இத்தகவல் அறிந்து வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஆனால், வீரகுமாரை போலீசார் விடுவிக்க மறுத்து விட்டனர்.
இதனால் போலீசாரை கண்டித்து நேற்று சிவகங்கையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
வீரகுமார் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும். இல்லை என்றால் நீதிமன்ற புறக்கணிப்பு தொடரும் என வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.