புதுவை காங்கிரஸ் கோஷ்டி மோதல் தீவிரம்
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கும், ராஜ்யசபா எம்.பியும், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவருமான நாராயணசாமியின் ஆதரவாளர்ளுக்கும் இடையிலான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. நாராயணசாமியின் கொடும்பாவியை ரங்கசாமி ஆதரவாளர்கள் தீவைத்துக் கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது போல, புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஏகப்பட்ட கோஷ்டிகள் உள்ளன. இருந்தாலும் பிரதானமாக இருப்பது முதல்வர் ரங்கசாமி மற்றும் முன்னாள் மாநிலத் தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான நாராயணசாமியின் கோஷ்டிகள்தான்.
இரு கோஷ்டிகளும் அடிக்கடி மோதிக் கொள்வதும், சரமாரியாக புகார்களைக் கூறி டெல்லிக்கு காவடி எடுப்பதும் சகஜமாகி விட்டது. இடை இடையே முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் கோஷ்டியும் சவுண்டு விடுவது வழக்கம்.
இந்த நிலவையில் கடந்த சில நாட்களாக ரங்கசாமிக்கு எதிராக நாராயணசாமி கோஷ்டியினர் படு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அவரது கோஷ்டியைச் சேர்ந்த ஐந்து அமைச்சர்கள் ரங்கசாமிக்கு எதிராக பகிரங்கமாக செயல்பட ஆரம்பித்துள்ளனர்.
இதன் உச்சகட்டமாக ஐந்து அமைச்சர்களும் திடீரென கிளம்பி டெல்லிக்குச் சென்றனர். அங்கு புதுவை மாநிலத்துக்கான கட்சியின் மேலிடப் பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து ரங்கசாமி மீது அடுக்கடுக்காக புகார்களைக் கூறி அவரை மாற்றக் கோரினர்.
அதேபோல நாராயணசாமியும், தன் பங்குக்கு ரங்கசாமி மீது புகார்களை அடுக்கி அவரை மாற்ற மேலிடத்தை வலியுறுத்தினார்.
இதனால் ரங்கசாமி மாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும் புதுச்சேரியில் ஏற்பட்டது. ஆனால் ரங்கசாமி மாற்றப்பட மாட்டார், முதல்வர் பதவியில் அவர் நீடிப்பார் என்று கட்சி மேலிடம் தெளிவாக கூறி விட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி சாதாரணமானதுதான், அது பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்பட்டு விடும் என கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று புதுச்சேரியில் ரங்கசாமி பேரவை தொண்டர்கள் சிலர், இந்திராகாந்தி சதுக்கம் பகுதியில் கூடி நாராயணசாமியின் கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ரங்கசாமி மற்றும் அவரது எதிர்ப்பாளர்களின் புது மோதலால் புதுச்சேரி அரசியல் களம் சூடாகிக் கிடக்கிறது.