பத்ம விபூஷன்: சச்சின் மகிழ்ச்சி
அடிலைட்: பத்ம விபூஷன் விருது கிடைத்துள்ளதற்கு சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 2வது மிகப் பெரிய சிவிலியன் விருதான பத்ம விபூஷன் விருது சச்சின் டெண்டுல்கருக்குக் கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் அடிலைட் நகரில் நடந்து வரும் 4வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ள சச்சின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் பல விருதுகளையும், பட்டங்களையும், பரிசுகளையும் வென்றுள்ளேன். ஆனால் அவை எல்லாவற்றையும் விட மிகவும் உயர்வானது இந்த விருது.
நாட்டின் மிகப் பெரிய 2வது சிவிலியன் விருதினை எனக்குத் தந்துள்ளதற்காக மத்திய அரசுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். என்னைக் கெளரவித்ததற்காக நன்றி கூறிக் கொள்கிறேன்.
நான் இந்தியாவுக்காக பல ஆண்டுகள் விளையாடி வருகிறேன். இந்த நிலையில் மத்திய அரசு எனக்கு தந்துள்ள இந்த கெளரவம் மிகவும் சிறப்பானது, விசேஷமானது.
எனது மனைவிதான் விருது கிடைத்த செய்தியை எனக்குத் தெரிவித்தார். கேட்டவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அப்போது ஆட்டத்தின் நடுவில் இருந்ததால், மகிழ்ச்சியை அடக்கிக் கொண்டு ஆட்டத்தில் கவனம் செலுத்தினேன்.
என்னைப் போல விருது பெற்ற மற்றவர்களையும் நான் வாழ்த்துகிறேன். பெரும் பெரும் ஜாம்பவான்களுடன் எனது பெயரும் இடம் பெற்றிருப்பது எனக்கு பெரிய கெளவரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
ஒரு நீண்ட நாள் கனவு நனவானது போல தோன்றுகிறது என்றார் சச்சின்.
சச்சின் தவிர ஆஷா போன்ஸ்லே, ரத்தன் டாடா, விஸ்வநாதன் ஆனந்த், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை முதன் முதலில் அடைந்த, சமீபத்தில் மரணமடைந்த எட்மண்ட் ஹில்லாரி உள்ளிட்டோருக்கும் பத்ம விபூஷன் விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.