வன்கொடுமை தடுப்பு, சிவில் உரிமை சட்டங்கள் திருத்தப்படுகின்றன
ஹைதராபாத்: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான சட்டமும், சிவில் உரிமைச் சட்டமும் பெருமளவில் திருத்தப்படவுள்ளதாக மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் மீரா குமார் கூறியுள்ளார்.
ஹைதராபாத் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தாழ்த்ப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் மற்றும் சிவில் உரிமை பாதுகாப்புச் சட்டத்தை திருத்தும் நோக்கில் நடவடிக்கைளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இதன் மூலம் இந்த சட்டங்கள் மேலும் வலுவுள்ளதாக, சக்தி வாய்ந்ததாக மாற்றப்படும்.
இந்த சட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மாநில அரசுகளிடம் கேட்டுள்ளோம். பல மாநிலங்கள் அதற்கு பதில் அளித்துள்ளன. அவற்றின் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
இதுதொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துடனும் ஆலோசித்து வருகிறோம்.
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்குள் இந்த திருத்தங்களை மேற்கொள்வது இயலாத காரியம். அதற்கு சில காலம் ஆகும்.
2010ம் ஆண்டுக்குள் இந்தியாவை வன்கொடுமை இல்லாத, தீண்டாமை இல்லாத நாடாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
பல மாநிலங்களில் வன்கொடுமை வழக்குகள் குறைந்துள்ளதாக காவல்துறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நிஜத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் இன்னமும் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டுதான் உள்ளனர். காவல்துறையை அணுக அவர்கள் தயங்குகின்றனர். இதனால் தான் வழக்குள் குறைவாக உள்ளது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது என்றார் மீரா குமார்.