மாணவர் தற்கொலை: கல்லூரியை அடித்து நொறுக்கிய மாணவர்கள்
சென்னை: பிட் அடித்ததுப் பிடிபட்ட தனியார் என்ஜீனியரிங் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அந்தக் கல்லூரியை மாணவர்கள் சூறையாடினர்.
சென்னையை அடுத்துள்ள படப்பை வஞ்சுவான்சேரியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு விக்னேஷ்(23) என்ற மாணவர் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
2007 டிசம்பரில் நடந்த செமஸ்டர் தேர்வில் விக்னேஷ் பிட் அடித்ததாக ஆசிரியர்கள் அவரை கையும் களவுமாக பிடித்து, அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு தேர்வு அறையை விட்டு வெளியே அனுப்பினர். இதனால் அவர் தொடர்ந்து தேர்வு எழுத முடியாமல் போனது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வெளியான தேர்வு முடிவில் விக்னேஷ் பெயில் ஆனார். மேலும் கல்லூரிக்கு வந்த விக்னேசை பேராசிரியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.
இதையடுத்து வீடு திரும்பிய விக்னேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் பேராசிரியர்களின் மிரட்டலால் தான் தான் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி மாணவர்கள் நேற்று கல்லூரி வளாகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
இதைக் கண்ட கல்லூரி நிர்வாகிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினர். இதைத் தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.
இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசார் தலையிட்டு சமரசம் செய்த பின்னர் மாணவர்கள் அனைவரும் வகுப்புகளுக்குச் சென்றனர்.
தொடர்ந்து அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்க கல்லூரி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications