தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு-சட்ட மசோதா தாக்கல்
சென்னை: தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வகை செய்யும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சட்ட மசோதாவை முதல்வர் கருணாநிதி சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார்.
தற்போது சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம். பண்டைய காலத்தில் அப்படித்தான் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், ஆரிய ஆதிக்கத்தால் இது மாறிவிட்டதாகவும், எனவே தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக மாற்ற வேண்டும் என்று பல்வேறு தமிழறிஞர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை ஏற்ற முதல்வர் கருணாநிதி சமீபத்தில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தினமாக மாற்றி அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து, தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கூடியபோது ஆளுநர் நிகழ்த்திய உரையிலும் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் இன்று முதல்வர் கருணாநிதி இது தொடர்பான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
இன்று காலை கேள்வி நேரம் முடிந்ததும் மசோதாவை முதல்வர் கருணாநிதி அறிமுகம் செய்து தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், மிக முக்கியமான முன்வடிவை, வரலாற்றுப் புகழ் மிக்க முன்வடிவை, இந்த அவையிலே நான் அறிமுகம் செய்ய அவையின் அனுமதியைக் கோருகிறேன்.
2008ம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய அனுமதி கோருகிறேன் என்று கூறினார்.
புதிய சட்ட மசோதாவின் படி ஆண்டுதோறும் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் முதல் தினமாக இருக்கும். மார்கழி மாதத்தின் கடைசி நாள் தமிழ் ஆண்டின் கடைசி நாளாக இருக்கும்.
அரசு அலுவலங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள் இந்த புதிய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து திருப்பூர் மற்றும் ஈரோடு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்திற்குப் பதிலாக புதிய மசோதாக்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.