எவரெடி பேட்டரி நிறுவன ஊழியர்கள் 25 பேர் மயக்கம்
சென்னை: சென்னை எவரெடி பேட்டரி தொழிற்சாலையில் இன்று காலை சிற்றுண்டி சாப்பிட்ட 25க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மயங்கி விழுந்தனர்.
திருவொற்றியூரில் இந்த தொழிற்சாலை உள்ளது. இங்கு 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஷிப்ட் முறையில் பணிபுரியும் ஊழியர்கள் தொழிற்சாலை கேன்டீனில் இன்று காலை சிற்றுண்டி சாப்பிட்டனர்.
சாப்பிட்ட சிறிது நேரத்தில் 25க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வாந்தி எடுத்தபடி அடுத்தடுத்து மயங்கினர். இதனால் தொழிற்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மயக்கமடைந்தவர்கள் அனைவரும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஊழியர்கள் சிலர் கூறுகையில், இட்லியுடன் தரப்பட்ட தக்காளி சட்னியில் பல்லி செத்து கிடந்துள்ளது. அதை சாப்பிட்டதால் தான் ஊழியர்கள் மயக்கம் போட்டு விழுந்ததாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.