நில மோசடி: பான் பராக் சாமியார் கைது
கோவை: கோவையில், விதவைப் பெண்ணிடம் ஹோமம் நடத்துவதாக கூறி ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலம், 12 பவுன் நகைகளை அபகரித்த சேகர் குருக்கள் என்கிற பான் பராக் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இங்குள்ள சேகர் குருக்கள் என்கிற சாமியாருக்கு பான் பராக் சாமியார் என்றுதான் பெயர். காரணம், இவரிடம் குறி கேட்டு வருவோருக்கு பான் பராக் போட்டு விட்டுத்தான் குறி சொல்வாராம் சாமியார்.
இவரிடம் கோவை கணபதியைச் ேசர்ந்த சண்முகசுந்தரி என்ற விதவைப் பெண் தனது பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டி வந்தார். அவரிடம் சிறப்பு ஹோமம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் பான் பராக் சாமியார்.
மேலும், திருப்பூரில் அவருக்குச் சொந்தமான ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலத்திற்கான பத்திரம், 12 பவுன் தங்க நகைகளையும் வாங்கியுள்ளார். பிறகு அந்த சொத்தை, வேறு ஒரு பெயருக்கு மாற்றி அபகரித்து விட்டார்.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சண்முகசுந்தரி பேரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் பான் பராக் சாமியாரைக் கைது செய்ய முடிவு செய்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.
2 மாதங்களாக தலைமறைவாக இருந்த பான் பராக் சாமியார் தற்போது போலீஸாரிடம் சிக்கியுள்ளார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸார் பின்னர் சிறையில் அடைத்தனர்.
இவர் ஏற்கனவோ போத்தனூரில் 40 பவுன் நகைகளை மோசடி செய்துள்ளார். ஒரு செக் மோசடி வழக்கிலும் இவர் சிக்கியவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பான் பராக் சாமியாரிடமிருந்து 10 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.