சந்திரசாமி வெளிநாடு போக டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி
டெல்லி: சர்ச்சைக்குரிய சாமியார் சந்திராசாமி என்கிற நேமி சந்த் ஜெயின் வெளிநாடு போக டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சந்திராசாமி மீது 12 அந்நியச் செலாவணி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அந்நியச் செலாவணி சட்டத்தின் பிரிவு 8(1)ஐ மீறும் வகையில், 3 பேரிடமிருந்து வெளிநாட்டுப் பணத்தை வாங்கியதாக சந்திராசாமீ மீது ஒரு வழக்கு உள்ளது. மேலும், அதற்குரிய அந்நியச் செலாவணியை அரசுக்கு செலுத்த் தவறியதாக இன்னொரு வழக்கு உள்ளது.
இதுதவிர 1980ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெறாமலேயே ஜக்தேவ் மிஸ்ரா மற்றும் ஜகதீஷ் பிரசாத் ஆகிய இருவரிடமிருந்தும் 2 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை பெற்றது தொடர்பாக இன்னொரு வழக்கு உள்ளது. இப்படி மொத்தம் 12 வழக்குகள் சந்திராசாமி மீது உள்ளன.
இந்த நிலையில் இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் ஒரு மாத கால சுற்றுப்பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரி டெல்லியில் உள்ள இரு நீதிமன்றங்களில் சந்திராசாமி மனு செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்த இரு நீதிமன்றங்களும் சந்திராசாமி சம்பந்தப்பட்ட ஒவ்வொரு வழக்குக்கும் ரூ.2 லட்சம் காப்புத் தொகையாக டெபாசிட் செய்து விட்டு வெளிநாடு போகலாம் என அனுமதி அளித்தது.
இதை எதிர்த்து பொருளாதார குற்றத் தடுப்பு இயக்குநரகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
சந்திராசாமி வெளிநாடு சென்றால் மீண்டும் இந்தியா திரும்ப மாட்டார். எனவே அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கக் கூடாது என்று அது கோரியிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல், பொருளாதாரக் குற்றத் தடுப்பு இயக்குநரகத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும் சந்திராசாமி வெளிநாடு செல்ல அனுமதி அளித்தது. அதேசமயம், காப்புத் தொகையாக ஒவ்வொரு வழக்கிலும் ரூ. 10 லட்சம் கட்ட வேண்டும் என சந்திராசாமிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.