ஜெ. மீது உரிமை மீறல் பிரச்சினை - சபாநாயகர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Jayalalitha

சென்னை: சட்டசபையில் தவறான தகவலை தெரிவித்ததால் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்படும் என சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த சட்டசபையின் இறுதி நாள் கூட்டத்தில் பெரும் அமளி துமளியாகி விட்டது. திடீரென சட்டசபைக்கு வந்த ஜெயலலிதாவுக்கும், முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் அன்பழகன், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் பெரும் அடிதடி ரகளை ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து சமீப காலங்களில் இதுவரை இல்லாத அளவு, முதல் முறையாக சட்டசபையை சபாநாயகர் ஆவுடையப்பன் 10 நிமிடங்கள் ஒத்திவைக்க நேரிட்டது.

நேற்று சட்டசபைக் கூட்டம் முடிந்ததும், செய்தியாளர்களை சபாநாயகர் ஆவுடையப்பன் சந்தித்தார். அவர்களிடம் சபாநாயகர் பேசுகையில், சட்டசபையில் எதிர்கட்சித் தலைவர் பேசுகையில், உச்சநீமன்றத் தீர்ப்பின் ஒரு பகுதியை மட்டும் வாசித்து அதாவது அவருக்கு சாதகமான பகுதியை மட்டும் வாசித்தார்.

இது அவையையும், அவை உறுப்பினர்களையும் திசை திருப்பும் நோக்கத்துடன் முதல்வர் மீது ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தெரிவித்து அவைக்கு தவறான தகவலைக் கொடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் அளித்த தகவல் தவறான தகவல் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அவையில் விளக்கம் அளித்தார். இப்பிரச்சினை குறித்து அவை முடிந்தவுடன், என்னிடம் ஒரு அறிக்கையை அளித்தார்.

இப்பிரச்சினையை மேல்வாரியாக பார்க்கும்போது அதில் அவை உரிமை மீறல் இருப்பதாக தெரிவதால், இந்தப் பிரச்சினை குறித்து ஆய்ந்து அறிக்கை அளிப்பதற்காக பேரவை விதி 226ன் கீழ் அவை உரிமை குழுவுக்கு அனுப்பவுள்ளேன் என்றார் சபாநாயகர் ஆவுடையப்பன்.

சபை முடிந்த பின்னர் இவ்வாறு உரிமை மீறல் பிரச்சினையை எழுப்ப முடியுமா என்ற கேள்விக்கு, ஆமாம் விதி இருக்கிறது. இதனை சுவமோட்டாவாக எடுத்துக் கொள்ள முடியும். அந்த அடிப்படையிலும் நான் எடுத்துள்ளேன்.

ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் மீது 2 உரிமை மீறல் பிரச்சினைகள் உள்ளன. இது 3வது பிரச்சினையாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 212வது விதியின் கீழ் சட்டசபை நடவடிக்கைகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்று உள்ளது. எனவே இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதிமுக உறுப்பினர் போஸ் தொடர்ந்த வழக்கிலும் இதையொட்டியே தீர்ப்பு வெளியாகியுள்ளது.

உரிமை மீறல் பிரச்சினை தொடர்பாக ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து உரிமை மீறல் குழு விரைவில் முடிவு செய்யும்.

சட்டசபை இன்று (நேற்று) ஒத்திவைக்கப்பட்டது போல, இதற்கு முன்பு ஓரிரு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார் ஆவுடையப்பன்.

ஜெயலலதா மீது ஏற்கனவே 2 உரிமை மீறல் பிரச்சினைகள் நிலுவையில் உள்ளன. சட்டசபையில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை குறித்து ஒரு உரிமை மீறல் பிரச்சினை உள்ளது.

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னைக் கொல்ல சதி செய்வதாக அவர் குற்றம் சாட்டியது தொடர்பாக இன்னொரு உரிமை மீறல் பிரச்சினை நிலுவையில் உள்ளது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+