சேது சமுத்திரத் திட்டத்தால் நாட்டுக்கு ஆபத்தில்லை-பாலு
சென்னை: சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏதும் இல்லை என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் ஆண்டு விழாவையொட்டி மீனவர்களுக்கு மெரீனாவில் படகு போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாலு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னை, கத்திப்பாரா மேம்பாலம் கட்டும்பணி பெருமளவு முடிந்துவிட்டது. வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு போக்குவரத்துக்கு திறந்து விடப்படும்.
சேது சமுத்திரத் திட்டத்துக்கு நம் நாட்டின் உயரிய அமைப்பான மத்திய அமைச்சரவை கூடி ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவது அவசியம் என ராணுவ அமைச்சகமும் குறிப்பு அனுப்பி உள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை.
இத் திட்டம் குறித்து மத்திய அமைச்சரவை நியமித்த குழுவின் ஆய்வறிக்கை கிடைத்துவிட்டது. அதை எப்போது உச்சநீதிமன்றம் தாக்கல் செய்வது என்பதை அமைச்சரவை கூடி முடிவு செய்யும்.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர் அம்பிகா சோனி வெளியிட்டுள்ள கருத்து அவரது சொந்த கருத்தாக இருக்கலாம். ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் அனைத்தும் உறுதியாக இருக்கின்றன என்றார் பாலு.